சாக்லெட் திருடியதற்காக 6ம் வகுப்பு மாணவனை 101 தோப்புக்கரணம் போட வைத்த கடைக்காரர்
சென்னை: சென்னை புழலில் சாக்லேட் திருடியதற்காக 6 ஆம் வகுப்பு மாணவரை தோப்புக்கரணம் போட வைத்த சூப்பர் மார்க்கெட் கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
செங்குன்றம் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த 6 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் கடந்த 13 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருள் வாங்க சென்றுள்ளார். அங்கு சாக்லேட் ஒன்றை அந்த மாணவர் திருடியதாக தெரிகிறது.
இதை கண்காணிப்பு கேமராவில் பார்த்த அந்த கடையின் உரிமையாளர் சரவணன் மாணவனை அடித்து 101 தோப்புக்கரணம் போட வைத்து சித்ரவதை செய்துள்ளார். கால் வலி தாங்காமல் அந்த மாணவர் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். ஆனால், அதனை கண்டுகொள்ளாத சரவணன் அதனை தன்னுடைய செல்போனில் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோவை சரவணன் வாட்ஸ் அப்பில் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார். இந்த வீடியோ மாணவனின் தாயாருக்கும் சென்றது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவனின் தாயார் இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவரை சித்ரவதை செய்த சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சரவணனை கைது செய்தனர்.