திருடனையும், எச்.ராஜாவையும் ஒன்றாகப் பார்த்தால் யாருக்கு முதல் அடி? ஈவிகேஎஸ்க்கு திடீர் 'ஐயம்'
திருடனையும், எச்.ராஜாவையும் ஒன்றாகப் பார்த்தால் எச்.ராஜாவைத்தான் தமிழக மக்கள் முதலில் அடிப்பார்கள் என்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் : திருடனையும், எச்.ராஜாவையும் ஒன்றாகப் பார்த்தால் எச்.ராஜாவைத்தான் தமிழக மக்கள் முதலில் அடிப்பார்கள் என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நாகப்பட்டினம் வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு திட்டமிட்டு தமிழர்களை ஏமாற்றி வருகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் நிச்சயம் தீர்வு காணப்படும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜகவினருக்கு பொய் சொல்வதே பிழைப்பாகிவிட்டது. இதற்கு எல்லாம் தகுந்த பாடத்தை தமிழகம் வரவிருக்கும் மோடிக்கு மக்கள் புகட்டுவார்கள். இவர்களை எதிர்க்க வேண்டிய அதிமுக, பாஜக சொல்படி தமிழகத்தில் ஆட்சி நடத்தி வருகிறது.
அதிமுக சார்பில் நடத்தப்பட்ட உண்ணாவிரதம் கூட வெறும் கண் துடைப்பு நாடகம்தான். தற்போதைய நிலையில் திருடனையும், எச்.ராஜாவையும் தமிழக மக்கள் ஒன்றாகப் பார்த்தால், திருடனை விட்டுவிட்டு எச்.ராஜாவையே அடித்துத் துவைப்பார்களோ என்கிற ஐயம் எனக்கும் ஏற்பட்டுள்ளது.
மேலும், காவிரி விவகாரத்தில் கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஐ.பி.எல் போட்டிகளை நிறுத்தவேண்டும் என்று சிலர் கோரிக்கை வைப்பது ஏற்புடையதல்ல. இவ்வாறு இளங்கோவன் கூறினார்.