காவி ஷெர்வானியில் அம்பேத்கர் சிலை... உ.பி அரசின் விஷமத்தால் மீண்டும் சர்ச்சை!
உத்திரபிரதேசத்தில் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை சீரமைக்கப்பட்டு காவி நிறம் பூசப்பட்டு மறுவடிவமைக்கப்பட்டுள்ளது போராட்டங்களுக்கு வித்திட்டுள்ளது.
Recommended Video
படான்: உத்திரபிரதேசத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலை அவசர அவசரமாக மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அம்பேத்கர் சிலை காவி நிறம் பூசப்பட்டு அமைக்கப்பட்டதால் மீண்டும் போராட்டங்கள் வெடித்தன.
உத்திரபிரதேச மாநில துக்ரய்யா மாவட்டத்தில் உள்ள படானில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அம்பேத்கரின் சிலை சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக உள்ளூர் மக்கள் போராட்டங்களையும் நடத்தினர்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் ஆக்ராவில் இருந்து புதிய அம்பேத்கர் சிலையை கொண்டு வந்து நிறுவ முடிவு செய்தது. அம்பேத்கரின் சிலை மீண்டும் அமைக்கப்பட்டாலும் போராட்டங்கள் ஓய்ந்த பாடில்லை. இதற்கு முக்கிய காரணம் அம்பேத்கர் சிலை வடிவமைக்கப்பட்டிருந்த விதம்.
காவி நிறத்தில் அம்பேத்கர் சிலை
அம்பேத்கர் சிலை பொதுவாக நீல நிற கோட் அணிந்தபடி கையில் சட்டபுத்தகத்தை ஏந்திய வண்ணம் அமைந்திருக்கும். ஆனால் புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை காவி நிற ஷெர்வானியும், வெள்ளை நிற பைஜாமாவும் அணிந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
|
அரசின் காவிமய முயற்சி
அரசு அனைத்தையும் காவிமயமாக்கும் முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில் அம்பேத்கர் சிலையிலும் அதனை வெளிக்காட்டியுள்ளதாக தலித் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். அண்மைக்காலமாக உத்திரப்பிரதேசத்தில் பூங்காக்கள், கட்டிடங்கள் என அனைத்தும் காவி நிறம் பூசப்பட்டது.
நீல நிறம் பூசப்பட்டது
தொடர்ந்து மக்களின் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட த் தலைவர் ஹேமேந்திர கவுதம் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு நீல நிறம் பூசப்பட்டது. போலீசார் முன்னிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அம்பேத்கர் பெயர் மாற்றம்
சமூக புரட்சியாளர் பீம்ராவ் அம்பேத்கரின் பெயரை இனி பீம்ராவ் 'ராம்ஜி' அம்பேத்கர் என்றே குறிப்பிட வேண்டும் என்று உ.பி அரசு உத்தரவு பிறப்பித்தது. அரசு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகளிலும் இந்த மாற்றத்தை கொண்ட வர திட்டமிடப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.