விபத்தில் மூளைச்சாவு: இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
கோவை: கோவையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மத்திய அரசு ஊழியரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டன.
கோவையை அடுத்த வீரகேரளத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் பாலசுப்பிரமணியன் (வயது 39). இவர் வடவள்ளியில் உள்ள மத்திய அரசின் கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.
கடந்த வாரம் பாலசுப்பிரமணியன் வீரகேரளம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது வாகன விபத்தில் சிக்கினார். படுகாயமடைந்த பாலசுப்பிரமணியத்தை கோவையில் உள்ள கே.ஜி. மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்தது.
இந்த நிலையில் பாலசுப்பிரமணியத்துக்கு மூளைச்சாவு ஏற்பட்டது தெரியவந்தது. எனவே பாலசுப்பிரமணியத்தின் குடும்பத்தினரிடம் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யுமாறு மருத்துவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அவர்களும் பாலசுப்பிரமணியத்தை மற்றவர்களின் உருவில் நாம் காணலாம் என நினைத்து உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தனர். அதைத் தொடர்ந்து இன்று காலை பாலசுப்பிரமணியத்தின் உடல் உறுப்புகளை டாக்டர்கள் குழு அறுவை சிகிச்சை செய்து அகற்றியது.
2 கண்கள், 2 சிறுநீரகம், கல்லீரல் ஆகியவை தானமாக பெறப்பட்டது. 2 கண்களும் உடனடியாக கோவை அவினாசி சாலையில் உள்ள அரவிந்த் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆம்புலன்ஸ் எந்த தடங்கலும் இல்லாமல் செல்ல போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்திருந்தனர். கே.ஜி.மருத்துவமனையில் இருந்து அரவிந்த் மருத்துவமனையை 4 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் சென்றடைந்தது.
பாலசுப்பிரமணியத்தின் உடலில் இருந்து அகற்றப்பட்ட 2 சிறுநீரகங்களில் ஒன்று கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கும் மற்றொரு சிறுநீரகம் கோவை கே.ஜி.மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டது.
கல்லீரல் பி.எஸ்.ஜி. மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. பாலசுப்பிரமணியத்தின் உடல் உறுப்புகள் ஆம்புலன்சில் ஏற்றிச்செல்லப்படுவதைப் பார்த்த அவரது குடும்பத்தினர் கதறி துடித்தது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.
தானமாக பெறப்பட்ட கண்கள் 2 பேருக்கும் 2 சிறுநீரகங்கள் 2 பேருக்கும், கல்லீரல் ஒருவருக்கும் பொருத்தப்படுகிறது. இதன் மூலம் உயிரிழந்தும் 5 பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார் பாலசுப்ரமணியன்.