எனது மகன் இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்..... மூளைச் சாவு அடைந்த சிறுவனின் தாய்
நெல்லை: விபத்தில் காயமுற்று மூளைச்சாவு அடைந்த நாகர்கோவில் சிறுவனின் இதயம், சென்னைக்கு தனி விமானம் மூலம் கொண்டுசெல்லப்பட்டு, ஆறு பேருக்கு பொறுத்தப்பட்டது.
நாகர்கோவில், கோட்டாறு வாகையடி தெருவை சேர்ந்தவர் சுவாமிநாதன். ஜவுளிக்கடை ஊழியர். இவரது மனைவி லதா, தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றுகிறார். இவர்களது மகன் அவினாஷ் 12, கோட்டாறு அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வந்தார்.
கடந்த 18ம் தேதி மாலையில் அவினாஷ், டியூசன் செல்வதற்காக சைக்கிளில் கிளம்பியுள்ளார். பறக்கை ரோடு ஜங்ஷனில் சென்றபோது, பைக் ஒன்று, சிறுவனின் சைக்கிள் மீது மோதியதில் படுகாயமடைந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சில தினங்கள் கடந்த பின்னரும் அவருக்கு நினைவு திரும்பவில்லை. ஆனால் இதயம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தொடர்ந்து இயங்கிவந்தன. மூளைச்சாவு அடைந்துள்ள நிலையில் அவரது பெற்றோர் மிகுந்த கவலைக்குள்ளாகினர்.
கடந்த 23ம் தேதி, அவினாஷ், மீண்டும் உயிர்பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலையில் அவரது உடல் உறுப்புகளை தானம் செய்யலாம் எனவும் இதன் மூலம் வேறு சிலர் உயிர்பிழைக்க வாய்ப்பிருப்பதை தெரிவித்தனர். எனவே சிறுவனின் பெற்றோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய சம்மதித்தனர்.
இதையடுத்து அவினாசின் இரண்டு கண்கள் நெல்லையில் உள்ள தனியார் கண் வங்கிக்கும், ஒரு கிட்னி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கும், இன்னொரு கிட்னி திருச்சி தனியார் மருத்துவமனையில் உள்ள நோயாளிக்கு பொருத்துவதற்கும் கொண்டுசெல்லப்பட்டன. கல்லீரல், திருச்சி தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுசெல்லப்பட்டது. காலை 10.30 மணிக்கு துவங்கிய அறுவை சிகிச்சை பிற்பகலுக்குள் நிறைவு பெற்றது.
அவினாஷ் -ன் உடல் உறுப்புகள் மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட பின்னர் அவரது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு இன்று மாலை சென்றடைந்தது. அவருக்கு முதன்மை கல்வி அலுவலர், ஆசிரியர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
மகன் உயிர்பிழைப்பது சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டதும், அவனது உடல் உறுப்புகள் 6 பேருக்கு பயன்பட்டது எனவும் அவர்கள் மூலம் அவினாஷ் இந்த உலகில் வாழ்வான் எனவும் அவனது பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.