எனது மகன் இறந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்..... மூளைச் சாவு அடைந்த மாணவனின் தாய்
சென்னை: சோழிங்கநல்லூர் அருகே விபத்தில் மூளைச்சாவு அடைந்த என்ஜினீயரிங் மாணவனின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன. தனது மகன் இறந்த பிறகும் உலகில் எங்கோ ஒரு பகுதியில், பலரது உடலில் வாழ்ந்து கொண்டிருப்பது மன நிறைவைத் தருவதாக அவரது தாயார் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் கோடீஸ்வரன். சித்த மருத்துவராக பணியாற்றிய இவர், கடந்த ஆகஸ்டு மாதம் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவரது மனைவி .விஜயலட்சுமி, இவர் விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் சசிதரன் (20), சென்னை புறநகரில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
சசிதரன் கடந்த 10-ந்தேதி, தீபாவளி பண்டிகையன்று சோழிங்கநல்லூர் டோல்கேட் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென விபத்தில் சிக்கினார். அதையடுத்து தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 23-ந்தேதி சசிதரனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அதேநேரம், அவரது இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட பிற உறுப்புகள் நன்றாக செயல்பட்டன. இதனால், தன் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்த விஜயலட்சுமி இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தார். இதையடுத்து, சசிதரனின் சிறுநீரகம், நுரையீரல், கண்கள், இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் உடலில் இருந்து எடுக்கப்பட்டன.
அவருடைய இதயம் அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு ஒரு இளம் பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. இதுபோல, பிற உறுப்புகளும் பிறருக்கு தானம் செய்வதற்காக, குளிர்சாதன பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாணவன் சசிதரனின் தாயார் விஜயலட்சுமி கூறும்போது,
சசிதரன் எனக்கு ஒரே மகன். கடந்த ஆகஸ்டு மாதம் எனது கணவர் மாரடைப்பால் காலமானார். இப்போது என் மகனையும் இழந்துவிட்டேன். ஆனால் என் மகன் சாகவில்லை. இந்த உலகில் எங்கோ ஒரு பகுதியில், பலருடைய உடலில் உயிரோடு வாழ்ந்து கொண்டிருக்கிறான். என் மகனுக்கு நேற்றுதான் பிறந்தநாள். அதேநாளில் அவனது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. அவனது உறுப்புகளை தானமாக பெற்று வாழ்பவர்களை நான் என்னுடைய பிள்ளைகள்தான் கருதுகிறேன், என்றார்.