ஏரிகளை உடைக்கும் ஆக்கிரமிப்பாளர்கள்... தவிக்கும் பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம் மக்கள்
சென்னை: சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில் உள்ள நாராயணபுரம் ஏரி உடைந்ததால் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கோவிலம்பாக்கம், நன்மங்கலம் பகுதிகளிலும் ஏரிகள் உடைக்கப்பட்டதால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
கனமழை காரணமாக ஆலந்தூர், ஆதம்பாக்கம், பழவந்தாங்கல் உள்பட பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. நேற்று முன்தினம் பெய்த மழையால் முகலிவாக்கம் திருவள்ளுவர் நகர் பகுதியில் மழைநீர் தேங்கியது. பள்ளிக்கரணையில், 140 ஏக்கர் பரப்பளவு கொண்ட நாராயணபுரம் ஏரி, கோவிலம்பாக்கம் ஊராட்சியில், 115 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி என, இரண்டு ஏரிகளின் கரைகளை ஆக்கிரமிப்பாளர்கள் நேற்று முன்தினம் இரவு உடைத்தனர்.
பள்ளிக்கரணை ஏரியை சுற்றியுள்ள எல்.ஐ.சி., நகர், ராஜேஷ் நகர், காந்தி நகர் போன்ற பகுதிகளும், கோவிலம்பாக்கம் ஏரியை சுற்றியுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, கோவிலம்பாக்கம் ஊராட்சி அலுவலகம், கோவிலம்பாக்கத்தின் பெரும்பகுதியும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன.
பள்ளிக்கரணை பாதிப்பு
பள்ளிக்கரணை சாலை நீரில் மிதப்பதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழை காரணமாக சென்னை பள்ளிக்கரணை ஏரி முழுக்கொள்ளளவை எட்டியது. நிரம்பியதால் தானாகவே ஏரி உடைந்துள்ளது. நேற்று மாலை இந்த உடைப்பு ஏற்பட்டது. அதன் காரணமாக ராஜேஷ் நகர் அங்குயிருக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புக்குளில் முதல் தளம் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சூழ்ந்த வெள்ளம்
ஜெரிசலம் பொறியியல் கல்லூரியை கடந்து பள்ளிக்கரணை சாலை முழுவதுமே வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் இதற்கு முன்பாகவும் உடைப்பு ஏற்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன. இந்த ஏரி பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் இங்கு இருக்கக் கூடிய குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். அத்தியாவசிய பொருட்கள் வாங்க படகில் செல்லவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.
பாதிப்பு அதிகம்
முதல் மாடியில் இருப்பவர்கள் மட்டுமே குடியிருப்புக்குள் இருக்கிறார்கள், ஆனால் அவர்களும் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேலியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
திங்கட்கிழமை பெய்த கனமழை காரணமாக அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து துண்டிப்பு
இது போன்ற சம்பவம் நடந்தும் மீட்பு நடவடிக்கைக்கு அரசு அதிகாரிகள் யாரும் வரவில்லை என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பள்ளிக்கரணையில் உள்ள பல் மருத்துவக் கல்லூரி அருகே வெள்ளம் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி அதிகாரிகளோ, அரசியல் தலைவர்களோ யாரும் பொருட்படுத்தாத சூழ்நிலையில் தற்போது வெள்ளம் சூழ்ந்து தனி தீவாக மாறியுள்ளது பள்ளிக்கரணையில் உள்ள ராஜேஷ் நகர்.
நிரந்தர தீர்வு என்ன?
பொதுவாகவே இதற்கு முன்பாக பெய்த மழையிலேயே இது போன்ற பாதிப்பு ஏற்பட்டிருந்த சூழ்நிலையில் அடுத்த மழை வருவதற்குள் நிரந்தர தீர்வுகாண வேண்டும் இங்கு இருக்கும் மதகுகளை புனரமைக்க வேண்டும் மேலும் அதை சுற்றியுள்ள வரப்புகள் அனைத்தையும் உயர்த்தி அதனை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் குற்றச்சாட்டு
இதனிடையே ஏரி உடைவதற்கும், வெள்ளம் குடியிருப்புகளுக்குள் வருவதற்கும் ஆக்கிரமிப்பாளர்கள் சிலரே காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஆக்கிரமித்து வீடுகட்டியுள்ள சிலர், ஏரியை உடைத்து விடுவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஆக்கிரமிப்பாளர்களால், பட்டா நிலங்களில் உள்ள நாங்கள் பாதிப்பு அடைகிறோம். அதிகாலையில் இருந்து மின்சாரமின்றி தவிக்கிறோம். வீட்டிற்குள் முழங்கால் அளவிற்கு வெள்ளநீர் தேங்கியுள்ளது. 10 நாட்களுக்கு முன், நாராயணபுரம் ஏரியை உடைத்ததற்கே, இதுவரை வீட்டிற்குள் முடங்கி கிடக்கிறோம். தற்போது மீண்டும் ஏரியை உடைத்துள்ளனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.
பாலம் உடைப்பு
நாராயணபுரம் ஏரி அருகே உள்ள காந்தி நகர், ராஜேஷ் நகர் போன்ற பகுதிகளை துரைப்பாக்கம் - பல்லாவரம் ரேடியல் சாலையுடன் இணைக்க, சிறு பாலம் ஒன்று, சில மாதங்களுக்கு முன் கட்டப்பட்டது. ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், அந்த பாலத்தின் கீழ் உள்ள மழைநீர் வடிகால் மூலம் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடையும். புதிய பாலத்தின் கீழ் உள்ள மழைநீர் வடிகால், வெள்ளம் செல்வதற்கு ஏற்றதாக இல்லை என கூறி, நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகள், அந்த பாலத்தை ஜே.சி.பி., இயந்திரம் மூலம், உடைத்து துாள்துாளாக்கினர்.பகுதிவாசிகள் கண்முன்னே, புதிய பாலம் தரைமட்டமானது.
மர்ம நபர்கள் உடைப்பு
கோவிலம்பாக்கம் ஏரியின் கரையை மர்ம நபர்கள் உடைத்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் காகிதபுரம், எல்.ஐ.சி.நகர், பாக்கியலட்சுமி நகர் போன்ற பகுதிகளில் உள்ள குடியிருப்பை சுற்றி வெள்ளம் சூழ்ந்து உள்ளது. பொதுமக்கள் வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. மேலும் மடிப்பாக்கம்-மேடவாக்கம் சாலை, பல்லாவரம்-பள்ளிக்கரணை ரேடியல் சாலை போன்ற முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியிருந்தது.ஆதம்பாக்கம் தில்லைகங்கா நகரில் மழைநீர் அகற்றும் பணிக்காக கால்வாய்களை உடைக்க மாநகராட்சி ஊழியர்களிடம் வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மூழ்கிய சுரங்கப்பாதைகள்
திங்கட்கிழமை பெய்த கனமழையால் பரங்கிமலை, பழவந்தாங்கல், தில்லைகங்கா நகர் சுரங்கப்பாதைகள் 3-வது முறையாக நிரம்பின. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. செவ்வாய்கிழமையன்ற மாலை பரங்கிமலை சுரங்கப்பாதையில் இருந்து மழைநீர் வெளியேற்றப்பட்டு போக்குவரத்துக்கு விடப்பட்டது. பழவந்தாங்கல் மற்றும் தில்லைகங்கா நகர் சுரங்கப்பாதைகளில் இருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.