வேறு பிரதமர் வேட்பாளரை தேடும் திமுக.. ராகுல் - ஸ்டாலின் நட்பில் விரிசலா?
திமுக கட்சி நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பதிலாக வேறு பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
சென்னை: திமுக கட்சி நாடாளுமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பதிலாக வேறு பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்த முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியா மொத்தத்தையும் பிடிக்கும் எண்ணத்தில் இருக்கிறது மத்திய பாஜக அரசு. அகண்ட பாரதம் என்ற பெயரில் பாஜக தேர்தலுக்காக தீவிரமாக பணியாற்றி வருகிறது.
இந்த நிலையில்தான் எதிர்க்கட்சிகள் எல்லாம் மொத்தமாக ஒன்று சேரும் நிலையில் உள்ளது. ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டு இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில், காங்கிரஸ் - திமுக உறவில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
அழைப்பை ஏற்கவில்லை
இந்த விரிசல் முதலில் வெளிப்படையாக கண்ணுக்கு தெரிந்தது, திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் நிகழ்ச்சியில்தான். அதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், ராகுல் காந்தி அந்த நிகழ்ச்சியை தவிர்த்தார். அதேபோல் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கும் இதில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ராகுல் இதில் கலந்து கொள்ளாதது பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியது.
வாரிசுகளின் நட்பு
இந்த நிலையில் கருணாநிதியும், சோனியா காந்தியும் நண்பர்களாக இருந்த அளவிற்கு, அவர்களின் வாரிசுகள் ராகுலும், ஸ்டாலினும் நண்பர்களாக இல்லை என்று கூறப்படுகிறது. ஆம், பெரிதாக இருவருக்கும் இணக்கம் இல்லை என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கிறது. இதனால்தான் காங்கிரஸ் நடத்திய முழு அடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு அளித்தும் கூட, களத்தில் எந்த திமுகவினரும் முழு அடைப்புக்கு ஆதரவாக இறங்கி வேலை செய்யவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.
புதிய பிரதமர் வேட்பாளர்
இதற்கு எல்லாம் முத்தாய்ப்பாக தற்போது துரைமுருகன் முக்கியமான கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதன்படி, திமுக தலைவர் ஸ்டாலின் காட்டும் நபரே அடுத்த பிரதமர் என்று கூறியுள்ளார். கூட்டணியில் ராகுல் காந்தி இருக்கும் போது, ஏன் துரைமுருகன் இப்படி பேசவேண்டும் என்று எல்லோருக்கும் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. கூட்டணி விரிசல் செய்தியில் இது இன்னும் கொஞ்சம் உப்பு காரம் சேர்த்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
மூன்றாவது அணி
இந்த காரணங்களால், மூன்றாவது கூட்டணி உருவாக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள். ஏற்கனவே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பெரிய அளவில் விருப்பம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தற்போது இதில் ஸ்டாலின் எடுக்கப்போகும் முடிவு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.