குட்கா விற்பனைக்காக ரூ 40 கோடி லஞ்சம்.. தமிழக அரசு அறிக்கை தர ஆளுநர் அதிரடி உத்தரவு!
குட்கா மற்றும் போதைப் பொருள் விற்பனைக்கு அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ரூ40 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக எழுந்த புகாரில் தமிழக அரசு அறிக்கை தர ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: தடை செய்யப்பட்ட போதைப் பொருள், குட்கா உள்ளிட்டகளை விற்க அமைச்சர் விஜயபாஸ்கர், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு 40 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அறிக்கை அளிக்க ஆளுநர் வித்யாசாகர் உத்தரவிட்டுள்ளார்.
குட்கா விற்பனையை சென்னையில் அனுமதிக்க உயர் போலீஸ் அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உட்பட பலர் லஞ்சம் பெற்றது வருமான வரித்துறை சோதனையில் வெளிச்சத்துக்கு வந்தது. குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது.
தடையை மீறி பல இடங்களில் இந்தப் பொருட்கள் விற்கப்படுவதாக அடிக்கடி புகார்கள் எழுந்தன. குறிப்பாக பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலேயே குட்கா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை இப்போதும் பரபரப்பாக நடந்து வருகிறது.
ஜார்ஜ் கடிதம்
இந்நிலையில், சென்னையில் தடை செய்யப்பட்ட மாவா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர் புகார்கள் எழுந்தன. அதன்பின்னர் முன்னாள் மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ், தமிழக உள்துறை செயலாளருக்குக் கடிதம் எழுதியிருந்தார். அதில் சட்டவிரோதமாக போதைப் பொருள்கள் விற்கப்படுவது பற்றி குறிப்பிட்டிருந்தார் ஜார்ஜ்.
40 கோடி லஞ்சம்
இது தொடர்பாக விசாரணையில் கடந்த 2015-16-ம் ஆண்டில் தீபாவளி போனஸ், கிறிஸ்துமஸ் போனஸ் மற்றும் மாதம்தோறும் செலுத்தப்படும் தொகை என மொத்தமாக சுமார் ரூ.40 கோடி வரை வழங்கியுள்ளதாக ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது" என்று தெரிவித்தனர். போதைப் பொருட்கள் விற்க போலீஸ் லஞ்சம் வாங்கியுள்ளது தெரிய வந்தது.
யார் யார்?
குட்கா விற்பனைக்கு லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் விஜயபாஸ்கர், சட்டம் ஒழுங்கு டிஜிபி டி.கே. ராஜேந்திரன், முன்னாள் சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது பெயர்களை வருமான வரித்துறை குறிப்பிட்டிருந்தது. இந்த ஆவணம் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
திமுக புகார்
இது தொடர்பாக விசாரணை நடத்ப்பட வேண்டும் என்று திமுக சட்டசபையில் தொடர்ந்து குரல் எழுப்பியது. மேலும், ஆளுநரிடமும் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
ஆளுநர் அறிக்கை கேட்பு
அதன் அடிப்படையில் இன்று பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், குட்கா லஞ்சம் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தமிழகத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.