சத்துணவு பணியாளருக்கு 1 லட்சம்... சமையலருக்கு 50,000.. இதுதான் "ரேட்".. கொடுப்பவருக்கே வேலை!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை சுற்றுவட்டார பள்ளிகளில் சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் பணிகளை நிரப்ப லட்சக் கணக்கில் லஞ்சம் கேட்கப்பட்டு வருவதால் விண்ணப்பதாரர்கள் மனவேதனைக்கு ஆளாகியுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள18 ஒன்றியங்களில் 800க்கும் மேற்பட்ட சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் பணி காலியாகவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் கடந்த மாதம் வாங்கப்பட்டன. 5,000க்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான நேர்காணல் பிப்ரவரி முதல் வாரம் நடந்திருக்க வேண்டும்.
ஆனால், அரசு ஊழியர்களின்போராட்டத்தால் தேதி குறிக்கப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டு நேர்காணல் நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த மாதம் முதல்வாரம் தேர்தல் தேதி அறிவிக்கும் சூழ்நிலை நிலவுகிறது.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் நேர்காணல் நடத்தி காலி பணியிடங்களை நிரப்புங்கள் என உத்தரவிடப்பட்டது. அதனால் 24,25, 26 மூன்று தேதிகளில் அந்த ஒன்றியங்களில் நேர்காணல் நடத்தப்பட்டு அடுத்த வாரம் பணியாணை வழங்குவதற்கான வேலைகளில் அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர்.
நேர்காணல் பற்றி விண்ணப்பதாரர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது, அதோடு செய்தித் தாள்களில் விளம்பரமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளும்கட்சியினர் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு 1.5 முதல் 2 லட்சம் வரையிலும், சத்துணவு சமையலர் பணிக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை பேரம் பேசி வேலை உங்களுக்கு வாங்கிதருகிறேன் என பலரிடம் பணம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அவசரம் அவசரமாக நேர்காணல் நடத்துவதே கண் துடைப்புக்காக தான். அதிமுகவை சேர்ந்த அமைச்சர், மா.செ,எம்.எல்.ஏக்கள் தரும் பட்டியலை அப்படியே அதிகாரிகள் ஏற்றுக்கொள்வார்கள் என்கிற பேச்சும் நிலவுகிறது. இந்த தகவலை கேட்டு விண்ணப்பதாரர்கள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர்.