துணைவேந்தர் ஊழலில் ஆளுநருக்கும் தொடர்பு... காளஹஸ்திக்காரருக்கு துணைவேந்தர் பதவியா?.. ராமதாஸ் கண்டனம்
சென்னை: தமிழக பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர் நியமனத்தில் ஊழல் தொடர்ந்து வருவதால் தமிழகத்தில் இனி உயர்கல்வியை காப்பாற்ற முடியாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் காட்டமான அறிக்கை விடுத்துள்ளார். அதில் துணைவேந்தர் நியமனத்தில் மிகப் பெரிய அளவில் ஊழல் தலைவிரித்தாடுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பான அவரது அறிக்கை:
தமிழ்நாட்டில் மேலும் இரு பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக சென்னை அண்ணா பல்கலைக்கழக படிக வளர்ச்சி மையத்தின் இயக்குனர் கே. பாஸ்கரும், கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகத் துணைவேந்தராக சிவகாசி ஸ்டாண்டர்ட் ஃபயர் ஒர்க்ஸ் மகளிர் கல்லூரி இணைப் பேராசிரியர் வள்ளியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அடிப்படை தகுதி இல்லை:
இவர்கள் இருவருமே துணைவேந்தர் பதவிக்கு பல்கலைக்கழக மானியக்குழு வரையறுத்துள்ள அடிப்படை தகுதியை பெறாதவர்கள். துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பம் செய்வதற்கே ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் 10 ஆண்டுகள் பேராசிரியராக பணியாற்றியிருக்க வேண்டியது அவசியம் ஆகும். ஆனால், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள கே.பாஸ்கருக்கு ஏழரை ஆண்டுகள் மட்டுமே பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் உள்ளது.
நெருக்கம்தான் காரணம்:
இந்த பதவிக்கு இவரை விட அதிக கல்வித்தகுதியும், அனுபவமும், ஆராய்ச்சித் திறனும் உள்ள ஏராளமான பேராசிரியர்கள் விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், அவர்கள் அனைவரையும் புறக்கணித்து விட்டு பாஸ்கருக்கு இப்பதவி கிடைத்திருப்பதற்கு முக்கியக் காரணம் அவர் தமிழக ஆளுனருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது தான். ஆந்திர மாநிலம் காளஹஸ்தியைச் சேர்ந்த இவரை துணைவேந்தராக பரிந்துரைக்க வேண்டும் என்று தேர்வுக்குழுவுக்கு ஆளுனர் தரப்பில் அளிக்கப்பட்ட அழுத்தமும், அதற்கான விலையை கொடுத்ததும் தான் அவருக்கு பதவியை பெற்றுத்தந்திருப்பதாக கூறப்படுகிறது.
சிறுமையான செயல்:
அதேபோல், அன்னை தெரசா பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள வள்ளி சிவகாசி தனியார் கல்லூரியில் வேதியியல் துறைத் தலைவராக பணியாற்றி வருபவர். கல்லூரியின் முதல்வராகக் கூட வருவதற்கு வாய்ப்பில்லாதவரை, ஒட்டுமொத்த மாநிலத்துக்குமான பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமித்தவர்களின் தொலைநோக்குப் பார்வையை எப்படிப் பாராட்டுவது என்று தெரியவில்லை, பேராசிரியராகக் கூட தகுதி பெறாதவரை துணைவேந்தராக நியமிப்பது அப்பதவியையே சிறுமைப்படுத்தும் செயலாகும்.
தகுதியே இல்லை:
தமிழ்நாட்டில் 8 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிகள் காலியாக உள்ளன. ஆட்சியில் இருந்து விலகுவதற்கு முன் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர் பணியிடங்களையும் நிரப்பி பெருமளவில் வருவாய் ஈட்ட ஆளுங்கட்சியினர் திட்டமிட்டிருப்பதாக கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் குற்றஞ்சாற்றியிருந்தேன். பல்கலைக்கழக துணை வேந்தர்களாக தகுதியற்றவர்கள் நியமிக்கப்படுவதிலிருந்தே நான் கூறியிருந்த குற்றச்சாற்று உண்மை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
ஏலமுறை விற்பனை:
உயர்கல்வி ஆராய்ச்சிக் கோவில்களான பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் பதவிகள் ஏல முறையில் விற்பனை செய்யப்படும் நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் உயர்கல்வியை யாராலும் காப்பாற்ற முடியாது. உயர்கல்வி ஊழலுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முடிவுகட்டப்பட போவது உறுதி.''என்று தெரிவித்துள்ளார்.