நெல்லை மனோன்மணியம் பல்கலை. பேராசிரியர் பணிக்கு பல லட்சம் ரூபாய் லஞ்சம்.. ஆளுநரிடம் புகார்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணிக்கு பல லட்சம் ரூபாய் லட்சம் பெறப்படுபவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருநெல்வேலி: நெல்லை பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணிக்கு பல லட்சம் பேரம் பேசப்படுவதாகவும், போதிய கல்வி தகுதி இல்லாதவர்களுக்கு பணி வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் நெல்லை-தென்காசி சாலையில் அபிஷேகப்பட்டியில் அமைந்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி பகுதியை சேர்ந்த கல்லூரிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. மனோன்மணியம் பல்கலைக் கழகத்தின் கீழ் உறுப்பு கல்லூரிகளும் இதன் கீழ் செயல்பட்டு வருகின்றன. இந்த பல்கலைக் கழகங்களில் தற்போது 24 துறைகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.
இதற்கான அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 9 பேராசிரியர், 17 இணை பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்கள் உள்ளிட்ட 54 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. கடந்த மாத இறுதியில் இருந்து இந்த பணிக்கான நேர்காணல் பல்கலைக் கழகத்தில் நடந்து வருகிறது. மேலும் சில துறைகளுக்கு நேர்காணல் நடக்க உள்ளது.
இந்நிலையில், நெல்லை மனோமணியம் பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர்கள் பேராசிரியர் பதவிக்கு மாற்றம் பெற ரூ.64 லட்சம் வரை பேரம் பேசப்படுவதாக கூறப்படுகிறது. இதற்காக வெவ்வேறு சிம் கார்டில் சம்பந்தப்பட்டவர்களுடன் பேரம் பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. பணத்தை வசூல் செய்வதற்காக சென்னையில் பல முகவர்கள் உள்ளனர். இந்த பணியிடத்திற்கான நேர்காணல் கண் துடைப்புக்காக நடத்தப்படுகிறது.
இதுகுறித்து கவர்னர் தீவிர விசாரணை நடத்தி முறைகேடான நியமனங்களை ரத்து செய்ய வேண்டும். பேராசிரியர் பணியிடத்திற்கு நேர்காணலில் ஐஐடி பேராசிரியர்களை கொண்ட குழுவை தேர்வு குழு அமைக்க வேண்டும் என்று புகார் ஒன்ற கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது.