ஆட்சியை காப்பாற்ற எம்எல்ஏக்களுக்கு பணம்.. தங்கம்.. விசாரணை குழு அமைக்க திருமாவளவன் கோரிக்கை
ஆட்சியை காப்பாற்ற எம்எல்ஏக்களுக்க பணம் மற்றும் தங்கம் கொடுக்கப்பட்டது தொடர்பாக விசாரணைக் கமிஷன் அமைக்க திருமாவளவன் கோரியுள்ளார்.
சென்னை: முதல்வர் பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போது பணம் தங்கம் லஞ்சமாக எம்எல்ஏக்களுக்கு கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து உண்மைகளை வெளி கொண்டு வர விசாரணை கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கோரியுள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது: நீட் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு எந்த நோக்கத்திற்காக நீட் தேர்வு நடத்தப்பட்டதோ அந்த நோக்கத்தை சிதைப்பதாக உள்ளது.
மாணவர்களுக்கு அநீதி
தேசிய அளவில் ஒரே மாதிரியான தேர்தல் நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, மாநிலத்திற்கு மாநிலம் வினாத்தாள் மாறுபாட்டிருந்தன என்று உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆக, இது மாணவர்களுக்கு இழைக்கப்பட்டிருக்கின்றன அநீதியாகும்.
மறு தேர்வு
நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை பொருட்படுத்தாமல் முடிவுகளை வெளியிட அனுமதி வழங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும்.
20 சதவீத இடங்கள்
பொறியியல் கல்லூரியில் ஒன்றரை லட்சம் குறைவாக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதனால் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஏராளமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. 100 இடங்களுக்கு 1000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். எனவே, தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் 20 சதவீத இடங்களை உயர்த்த வேண்டும்.
எம்எல்ஏக்களுக்கு லஞ்சம்
முதல்வர் பழனிச்சாமி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறுவதற்கு எம்எல்ஏக்களுக்கு பேரம் பேசப்பட்டுள்ளது. லஞ்சமாக பணம் அல்லது தங்கம் வழங்கப்பட்டது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து வெளியான டேப்பில் தந்ததாகவோ வாங்கியதாகவோ தகவல்கள் எதுவும் இல்லை.
நீதி விசாரணை
நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்த போதே பணம் வழங்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து உண்மையை வெளி கொண்டு வர தமிழக முதல்வர் விசாரணை கமிஷன் ஒன்றை அமைக்க வேண்டும். இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிடுவது ஏற்புடையது அல்ல என்று திருமாவளவன் கூறினார்.