மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் வைகுண்டராஜன் சரண்
மதுரை: ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் வி.வி.மினரல்ஸ் அதிபர் வைகுண்டராஜனும் அவரது சகோதரரும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார்.
தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் துறைமுக பொறுப்புக்குழு தலைவராக இருந்தவர் சுப்பையா. இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.8 கோடியே 23 லட்சத்து 93 ஆயிரத்து 501 மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி குவித்ததாக சிபிஐ கடந்த 2012ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.
இவ்வழக்கில், சுப்பையாவுக்கு போலி நில பேரம் மூலம் ரூ. 7.5 கோடி லஞ்சம் அளித்துள்ளாக வி.வி.மினரல்ஸ் நிறுவன பங்குதாரர்களான வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அவர்களை கைது செய்யும் முயற்சியிலும் சிபிஐ இறங்கியது.
இதனையடுத்து இருவருடைய முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்தமனுக்கள் நவம்பர் 7ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து வைகுண்டராஜன் சகோதரர்கள் திடீரென தலைமறைவாயினர்.
இந்நிலையில் வைகுண்டராஜன், ஜெகதீசன் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் டிசம்பர் 19ஆம்தேதியன்று மீண்டும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் ஜனவரி 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின் நீதிபதி கூறியதாவது: இந்த வழக்கு 2012ஆம் பதியப்பட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரி சுப்பையா முதல் எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவரை இன்னும் கைது செய்யவில்லை. அவரது சகோதரரை கைது செய்துள்ளனர். ஆனால் அவரது வாக்குமூலத்தை பதியவில்லை.
காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமைக் காவலருக்குக்கூட, கைது செய்யப்படுபவரிடம் வாக்குமூலம் பெற்று பதிய வேண்டும் என்பது தெரியும்.
சிபிஐக்கு தெரியாமல் போனது ஏன்? சுப்பையாவை கைது செய்யாதது ஏன்? அவர் பதவி உயர்வு பெற்று மேற்குவங்கத்தில் தகவல் தொழில்நுட்ப செயலராக உள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் அமைச்சரவை செயலராகக்கூட வாய்ப்புள்ளது. சிபிஐ செயல்பாடு ஆச்சர்யமாக உள்ளது.
இதில் முதல் எதிரியை கைது செய்யவில்லை. கைது செய்தவரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பதியவில்லை. வைகுண்டராஜனுக்கு சிபிஐ அனுப்பிய சம்மன் திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனவே, இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்படுகிறது.
மனுதாரர்கள் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் இருவரும் தலா ரூ.5 லட்சத்திற்கான உத்தரவாதப் பத்திரத்தையும், இரு தனிநபர் ஜாமீனையும் தாக்கல் செய்யவேண்டும். அதன்பிறகே, சென்னை சிபிஐ அலுவலகத்தில் 15 நாட்களுக்கு காலை 10.30 மணி, மாலை 6.30 மணி ஆகிய இருவேளைகளில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். சாட்சிகளை கலைக்கும் வேலைகளில் ஈடுபடக்கூடாது. அப்படி ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட நீதிமன்றம் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என நீதிபதி அப்போது உத்தரவிட்டார்.
இதன்படி 15 நாட்கள் சென்னை சி.பி.ஐ அலுவலகத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். இந்நிலையில், உயர்நீதிமன்ற கிளை முன் ஜாமீன் உத்தரவின்படி வைகுண்டராஜனும் அவரது சகோதரர் ஜெகதீசனும் மதுரை சிபிஐ நீதிமன்றத்தில், வியாழக்கிழமை சரணடைந்தனர். இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.