புதுத் தாலி தழையத் தழைய கழுத்தில் தொங்க... டிஎன்பிஎஸ்சி தேர்வெழுதிய புதுமணப் பெண்
விழுப்புரத்தில் தாலி கட்டிய அடுத்த நிமிடம் கல்யாண மண்டபத்தில் இருந்து நேராக டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத பி.இ. பட்டதாரிப் பெண் ஒருவர் சென்றார்.
சென்னை: அரசுத் துறையில் காலியாக உள்ள பணி இடங்களை நிரப்புவதற்கான தேர்வு இன்று காலை நடைபெற்றது. தாலி கட்டிக் கொண்ட அடுத்த நிமிடமே அங்கிருந்து புறப்பட்டு நேராக டிஎன்பிஎஸ்சி தேர்வு நடக்கும் பள்ளிக்கு சென்று குரூப் - 4 தேர்வை எழுதினார் பி.இ. பட்டதாரியான புதுமணப் பெண்.
தமிழகம் முழுவதும், அரசு துறைகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட 5 ஆயிரத்து 451 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வு, இன்று நடைபெற்றது. இந்தத் தேர்வில் , 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேர் 301 மையங்களில் தேர்வு எழுதினார்கள்.
விழுப்புரம் அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வருகிறார் சுப்பிரமணியன். இவருக்கு அகிலாண்டேஸ்வரி என்ற மகள் இருக்கிறார். பி.இ. பட்டதாரியான இவருக்கும், மேல் தணிக்கலாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவரும் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ள மெப்ஸில் பணியாற்றி வரும் தமிழரசனுக்கும் இன்று காலை விழுப்புரத்தில் திருமணம் நடைபெற்றது.
திருமணம் நடந்து முடிந்த அடுத்த கணம் மணப்பெண் அகிலாண்டேஸ்வரி போட்டித் தேர்வு எழுத புறப்பட்டார். திருமண வாழ்த்து சொல்ல வந்த உறவினர்கள், தேர்வு எழுதவும் வாழ்த்து தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர். அவர் திருமண மண்டபத்தில் இருந்து மாம்பழப்பட்டு சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு தேர்வு எழுத மணக்கோலத்தில் சென்றார். திருமணம் நடந்து முடிந்த கையோடு மணக்கோலத்தில் அகிலாண்டேஸ்வரி தேர்வு எழுதச் சென்றது தேர்வு எழுத வந்தவர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தத் தேர்வில் விழுப்புரம் மாவட்டத்தில் 186 தேர்வு மையங்களில் 72 ஆயிரத்து 943 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். 32 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.
சென்னையில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இத்தேர்வை கண்காணிக்க 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலைமை கண்காணிப்பாளர்களும், 566 பறக்கும் படையினரும் அமைக்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 மையங்களில் நடைபெற்ற இத்தேர்வில், 67 ஆயிரத்து 156 பேர் பங்கேற்றனர். தேர்வை கண்காணிக்க 41 நடமாடும் குழுக்களும், 24 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டன. வீடியோ கேமராக்கள் மூலமும் தேர்வு கண்காணிக்கப்பட்டது.
அதே போன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 141 மையங்களில் 55 ஆயிரத்து 957 பேர் தேர்வு எழுதினர். கண்காணிப்புப் பணியில் 190 வருவாய் அலுவலர்களும், 20 பறக்கும் படையினரும் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள 173 மையங்களில் 52 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுதினர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 123 மையங்களில் 42 ஆயிரத்து 584 பேர் தேர்வு எழுதினர். 10 பறக்கும் படை உள்ளிட்ட அதிகாரிகள் தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.