அதிக வரதட்சணை கேட்ட அடாவடி மணமகன் – உதறித்தள்ளிய அசத்தல் மணமகள்!
ஆம்பூர்: ஆம்பூர் அருகே அதிக வரதட்சணை கேட்ட மாப்பிள்ளையை மணப்பெண் உதறித்தள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர் அருகே உள்ள கதவாளம் யாதவர் தெருவை சேர்ந்தவர் சரவணன் கட்டிட மேஸ்திரி.
இவருக்கும் வாணியம்பாடி அருகே உள்ள வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயம் செய்தனர்.
20 பவுன் வரதட்சணை:
அப்போது 20 பவுன் நகை, சீர் வரிசை பொருட்களை மாப்பிள்ளை வீட்டார் வரதட்சணையாக கேட்டுள்ளனர். அதற்கு பெண் வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
திருமண ஏற்பாடு:
இதனையடுத்து இன்று காலை ஆம்பூர் பாலாற்றின் கரையில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்தனர். இரு தரப்பினரும் பத்திரிக்கை அடித்து உறவினர், நண்பர்கள் வீடுகளில் கொடுத்தனர்.
களை கட்டிய மண்டபம்:
நேற்று இரவு இரு வீட்டாரும் திருமண மண்டபத்துக்கு வந்தனர். வாழை தோரணங்கள் மின்விளக்குகளால் மண்டபம் ஜொலித்தது. விருந்தினர்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மண்டபம் திருமண களை கட்டியிருந்தது.
அடாவடி மாப்பிள்ளை:
அப்போது மாப்பிள்ளை அழைப்புக்கு ஏற்பாடு செய்தனர். அப்போது தான் மாப்பிள்ளை சரவணன் தனது அடாவடியை காட்ட தொடங்கினார்.
கூடுதல் நகை:
இப்போதே கூடுதலாக 5 பவுன் நகை போட்டால் தான் திருமணம் செய்வேன் என்றார். அதற்கு சம்மதித்த மணப்பெண் வீட்டார் அதற்கு ஏற்பாடு செய்தனர்.
பைக் கேட்ட மாப்பிள்ளை:
இதையறிந்த மாப்பிள்ளை உடனே ஒரு பைக் வாங்கி தாருங்கள் எனக் கேட்டுள்ளார். அதற்கும் பெண் வீட்டார் ஏற்பாடு செய்துள்ளனர்.
பெண் பெயரில் நிலம்:
அதற்கு பின் பெண் பெயரில் 10 சென்ட் நிலத்தை எழுதி இப்போதே எழுதி தாருங்கள் இல்லாவிட்டல் திருமணம் நடக்காது எனக் கூறியதாகத தெரிகிறது.
நிலம் கொடுத்தால் தாலி:
மாப்பிள்ளையின் அடுத்தடுத்த அடாவடியால் கலங்கி போன பெண் வீட்டார் மாப்பிள்ளையை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கினர். ஆனால் நிலத்தை எழுதி வைத்தால் தான் தாலி கட்டுவேன் எனக் கூறி மாப்பிள்ளை அடம் பிடித்துள்ளார்.
உதறித்தள்ளிய மணப்பெண்:
இந்த செய்தி மணப்பெண் காதுக்கு சென்றது. சுதாரித்து கொண்ட அவர் வரதட்சணை கேட்டு அடம் பிடிக்கும் மாப்பிள்ளை தனக்கு வேண்டாம் எனக் கூறி மாப்பிள்ளையை உதறினார்.
நின்று போன திருமணம்:
இதனையடுத்து பெண் வீட்டார் மணப் பெண்ணை அழைத்துக் கொண்டு விட்டுக்கு சென்றனர்.இதனால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்றது. இந்த சம்பவம் ஆம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.