அஜால், குஜால் செய்துவிட்டு காதலன் அப்பீட்.. கண்டுபிடிக்கக் கோரி கலெக்டரிடம் வந்த புதுப்பெண்
திருவள்ளூர்: காதலித்த பெண்ணுடன் உல்லாசமாக இருந்துவிட்டு திருமண நாளில் ஓட்டம் பிடித்த காதலனை கண்டுபிடித்து தன்னுடன் சேர்த்து வைக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் மணமகள் புகார் அளித்துள்ளார்.
புது கும்மிடிபூண்டியை சேர்ந்தவர் சம்பத்குமார், இவரது மகள் சங்கீதா (20). 10-வது வகுப்பு வரை படித்து இருக்கிறார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதபாளையத்தை அடுத்த ராசி கண்டிகை என்ற இடத்தைச் சேர்ந்தவர் விவேக் (22). பி.இ. பட்டதாரியான இவருக்கும், சங்கீதாவுக்கும் கல்லூரியில் படித்த போது காதல் மலர்ந்தது.
இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக "காதல் ஆலாபனை" செய்து வந்தனர். இதை அறிந்த விவேக்கின் பெற்றோர் அவர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து கடந்த ஆகஸ்டு 30-ம் தேதி இருவரும் ஊரை விட்டு வெளியேறி கொடைக்கானலுக்கு சென்று அங்கு ஓட்டலில் அறை எடுத்து தங்கி சுமார் ஒரு மாத காலம் உல்லாசமாக இருந்தனர்.
பின்னர், சங்கீதாவின் பெற்றோர் அங்கு சென்று இருவரையும் புது கும்மிடிப்பூண்டிக்கு அழைத்து வந்து கடந்த செப்டம்பர் 18-ம் தேதி இருவருக்கும் பதிவு திருமணம் செய்து வைத்தனர்.
இதற்கிடையே சங்கீதாவின் பெற்றோரை தொடர்பு கொண்ட விவேக்கின் பெற்றோர் அவர்களது காதலை ஏற்று கொள்வதாக தெரிவித்தனர்.
மேலும், இருவருக்கும் முறைப்படி கோவிலில் வைத்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றனர். அதனை ஏற்றுக்கொண்ட சங்கீதாவின் பெற்றோர் திருமணத்து தேதி குறிக்கும் படி கேட்டனர்.
அதனையடுத்து இன்று திருமணத்துக்கு தேதி குறிக்கப்பட்டது. சூலூர்பேட்டையில் உள்ள செங்காளம்மன் கோவிலில் இன்று முறைப்படி திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
விவேக்கும், சங்கீதாவும் மணமக்கள் கோலத்தில் குடும்பத்தினருடன் சூலூர்பேட்டை செங்காளம்மன் கோவிலுக்கு இன்று காலை வந்தனர். ஆனால் திருமணத்துக்கு விவேக் குடும்பத்தினரும், உறவினர்களும் வர வில்லை.
சிறிது நேரத்தில் அவர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்கள் வரவில்லை. இதற்கிடையே மணமகள் சங்கீதாவுடன் இருந்த விவேக்கையும் காணவில்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
மணமகன் விவேக்கை சங்கீதாவின் உறவினர்கள் பல இடங்களில் தேடினார்கள். ஆனால் அவர் கிடைக்க வில்லை. சங்கீதாவை தவிக்க விட்டு விவேக் ஓடி விட்டது தெரியவந்தது.
அதனையடுத்து, பெற்றோருடன் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சங்கீதா அங்கு கலெக்டர் வீரராகவராவிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், காதல் கணவரை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் அதனை சமூக நலத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.