"கல்யாணத்தில் இஷ்டமில்லை”- திருமண நாளன்று விஷம் குடித்து மயங்கிய மணமகள்
கோவை: கோவையில் இளம்பெண் ஒருவர் திருமண நாளன்று விஷம் அருந்தி மயங்கிய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.
கோவையைச் சேர்ந்த மணமக்களுக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி இடையார் பாளையத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. சடங்கு சம்பிரதாய முறைகள் முடிந்து பின்னர் இருவரும் இணைந்து போட்டோ எடுத்துக்கொண்டனர். இரவு 11 மணி வரை நண்பர்கள், தோழிகளுடன் போட்டோ எடுத்தனர். 12 மணிக்கு மணமகள் அவருடைய அறைக்கு திரும்பினார்.
இன்று அதிகாலை 5 முதல் 6 மணிக்குள் முகூர்த்தம் என்று குறிக்கப்பட்டது. முன்னதாக அதிகாலை வரை திருமண மேடை அலங்கரிக்கப்பட்டது. சிறிது நேரம் சென்றதும் புதுப்பெண்ணை அலங்கரிப்பதற்காக அவரது உறவினர்கள் மணப்பெண்ணை எழுப்பினர். அப்போது அவரது வாயில் நுரையுடன் மயங்கிய நிலையில் கிடந்தார்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அலறி சத்தம்போட்டனர். அடுத்த வினாடியே திருமண மண்டபம் முழுவதும் உறைந்து போனது. உடனடியாக மணப்பெண்ணை மீட்ட உறவினர்கள் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர் மணப்பெண்ணுக்கு மயக்கம் தெளிந்தது. திருமணம் நடக்க 2 மணி நேரமே இருந்த நிலையில் ஏன் விஷம் குடித்தாய் என்று உறவினர்கள் கேட்டபோது தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறினார்.
இதைக்கேட்டதும் உறவினர்கள் திகைத்துபோனார்கள். திருமணம் பிடிக்கவில்லை என்றால் முன்னதாகவே கூறியிருக்கலாம் என்று கேட்டபோது பதில் கூற மறுத்துவிட்டார். பாதிக்கப்பட்ட மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் திருமணம் பிடிக்கவில்லை என்றால் ஏன் சம்மதிக்க வேண்டும். இப்போது யாருக்கு அவமானம் என்று கூறி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
அங்குள்ள பெரியோர்கள் தலையிட்டு நின்ற திருமணம் நின்றதாகவே இருக்கட்டும், எதுவாக இருந்தாலும் பிறகு பேசிக்கொள்ளலாம் என்று கூறியதின் பேரில் இரு வீட்டாரும் மண்டபத்தை காலி செய்து அவரவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.