திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற புதுமாப்பிள்ளை – பஸ் மோதி பலி
வேலூர்: வேலூரில் திருமண அழைப்பிதழ் கொடுக்கச் சென்ற புது மாப்பிள்ளை பேருந்து மோதி மரணமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த, குறும்பேரியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் சதீஸ்குமார். இவர் ஓசூரில் லாரி டிரைவராக வேலை செய்துவருகிறார்.
இவருக்கு வரும் மே 1 ஆம் தேதி திருமணம் நடக்க இருந்தது. தனது சொந்த ஊரிலுள்ள உறவினர் மற்றும் நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக திருப்பத்தூருக்கு பைக்கில், சென்று கொண்டிருந்தார்.
ஓசூர், சீத்தாராம்மேடு அருகே செல்லும் போது, அவ்வழியாக வந்த தனியார் பேருந்து ஓன்று சதீஸ்க்குமார் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட சதீஸ்குமார் படுகாயம் அடைந்தார்.
அந்த வழியாகச் சென்றவர்கள் அவரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.