தாலி கட்டும் நேரத்தில் “எஸ்கேப்” – எஞ்சினியர் மாப்பிள்ளைக்கு போலீஸ் வலைவீச்சு
செங்கம்: செங்கத்தில் தாலி கட்டும் நேரத்தில் மின்சாரவாரிய எஞ்சினியர் மணமகன் மாயமானார். இதனால் திருமணம் நின்ற சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், துக்காபேட்டையை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் பிரபாகரன். பி.இ.படித்துள்ள இவர், புதுப்பாளையத்தில் மின்வாரிய உதவி செயற் பொறியாளராக வேலைபார்க்கிறார்.
இவருக்கும் வேலூர் மாவட்டம் ஆற்காட்டை சேர்ந்த முதுநிலை பட்டதாரி பெண் ஒருவருக்கும் பெற்றோரால் நிச்சயம் செய்யப்பட்டு திருமண ஏற்பாடு செய்யப்பட்டது. நேற்று காலை 6 மணி முதல் 7.30 மணிக்குள் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக திருமண பத்திரிகை அடித்து உறவினர்கள், நண்பர்களுக்கு கொடுத்தனர். பெரியோர்கள் நிச்சயித்தபடி திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன.
செங்கம் துக்காப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் திரண்டிருந்தனர். மணமக்கள் அழைப்பும் நடந்தது.
இதில் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர். நேற்று அதிகாலை 4 மணி அளவில் மணமகன் பிரபாகரன் வெளியில் சென்று விட்டு வருவதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், நீண்டநேரமாகியும் அவர் திருமணமண்டபத்திற்கு திரும்பவில்லை.
தாலிகட்டும் நேரம் நெருங்கியதால் மணமகன் மற்றும் மணமகளின் வீட்டார் இடையே பரபரப்பு ஏற்பட்டது. மாப்பிள்ளையை பல இடங்களில் தேடினர். போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை.
முகூர்த்த நேரம் முடிந்தும் மணமகன் வராததால் திருமணம் நின்றது. இதனால் திருமண மண்டபத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பெண் வீட்டார் செங்கம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பூபதி வழக்குப்பதிவு செய்து திருமணம் பிடிக்காமல் மணமகன் மாயமானாரா அல்லது வேறுபெண்ணுடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.