மணமகளைக் கைபிடிக்க விஷம் குடித்த காதலன்- அத்தை மகளை கரம்பிடித்த மணமகன்
ஓசூர்: ஓசூரில் காதலியான மணமகளைக் கைப்பிடிக்க காதலன் நடத்திய நாடகம் வெளியாகி கடைசியாக அத்தை மகளைக் கைபிடித்தார் மணமகன்.
ஓசூர் சூளகிரி அருகே கொரளதொட்டி பகுதியைச் சேர்ந்த அனிதா. இவருக்கும் சூளகிரி அடுத்த பி.கொத்தப்பள்ளியைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் சூளகிரியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று காலை 7:30 மணிக்கு திருமணம் நடக்க இருந்தது.
இரு வீட்டாரும் நேற்று முன்தினம் திருமண மண்டபத்தில் திரண்டனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 4:00 மணிக்கு மணமகள் அறையை தட்டிய மர்ம நபர்கள் இருவரை மாப்பிள்ளை வீட்டார் பிடித்து விசாரித்த போது அவர்களிடம் கம்பி மற்றும் மிளகாய் தூள் இருந்தது தெரிய வந்தது.
இருவரையும் சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். இருவரும் மண்டபத்திற்கு திருட வந்திருக்கலாம் என போலீசாரும் மணமகன் வீட்டாரும் நினைத்தனர். விசாரணையில் இருவரும் சூளகிரி அடுத்த நல்லகானகொத்தப்பள்ளியைச் சேர்ந்த குமார், ஓசூர் அடுத்த நாகமலை பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பது தெரிய வந்தது.
இருவரும் ஓசூர் அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த மாதேஷ் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க மணமகளை கடத்திச் செல்ல வந்தது தெரிந்து போலீசாரும் மணமகன் வீட்டாரும் அதிர்ச்சி அடைந்தனர்.
நேற்று காலை 6:45 மணிக்கு திருமண மண்டபத்திற்கு சென்ற மாதேஷ் "என்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வேன்" என மணப்பெண்ணிடம் கூறினார்.
அனிதாவின் உறவினர்கள் மாதேஷை அடித்து வெளியேற்றினர். அப்போது மறைத்து வைத்திருந்த விஷத்தை மாதேஷ் குடித்தார். இவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் சூளகிரி அடுத்த திருமலைகோட்டா பகுதியில் உள்ள தனியார் கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் மாதேஷ் அனிதா வேலை செய்த போது இருவரும் காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அனைத்தையும் அறிந்து பெருமூச்சு விட்ட மணமகன் ரமேஷ் கடைசி யில் அத்தை மகள் திவ்யாவை திருமணம் செய்து கொண்டார்.