நர்ஸ் மணமகளை ஏமாற்றிய மணமகன் வீட்டார் – ஆட்டோ டிரைவருடன் “சடர்ன்” திருமணம்!
சென்னை: சென்னையில் திருமணம் நிச்சயக்கப்பட்ட மணமகன் ஏமாற்றியதால், ஆட்டோ டிரைவர் ஒருவரை நர்ஸ் வேலை செய்யும் மணப்பெண் மணம் புரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பெரும்பாக்கத்தில் உள்ள கலியன் என்பவரது மகள் நாகவள்ளி.
அவருக்கும், பெரம்பூர் பி.பி.ரோடு பகுதியைச் சேர்ந்த விக்னேசுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
கேட்டரிங் மணமகன்:
மணமகள் நர்சிங் படித்தவர். மணமகன் கேட்டரிங் படித்து விட்டு வேலை பார்ப்பதாக கூறியுள்ளனர்.
திருமன ஏற்பாடுகள் மும்முரம்:
நாகவள்ளி அண்ணா நகரில் ஒரு தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். அவருடன் வேலை பார்க்கும் நர்ஸ் மூலம் விக்னேஷ் அறிமுகம் ஆனார். அவரை நல்லவன் என்று நம்பி திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
சொந்த வீடு எனப் பொய்:
மணப்பெண் வீட்டார் சென்னை வந்து பார்த்த போது, வியாசர்பாடி சாஸ்திரி நகர் 1 ஆவது தெருவில் உள்ள ஒரு வீட்டை தங்களுடைய வீடு என்று சொன்னதாக கூறப்படுகிறது.
திருமண அழைப்பிதழ்கள்:
இதை நம்பி அவர்கள் விக்னேசுக்கு மணம் முடித்து கொடுக்க ஒப்புக் கொண்டனர். பெண் வீட்டார் திருமண ஏற்பாடுகளை செய்தனர். இதையடுத்து கடந்த மாதம் மணமகன் வீட்டார் பெண் வீட்டில் திருமண அழைப்பிதழை கொண்டு கொடுத்தனர்.
கோவிலில் கல்யாணம்:
அதில் வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியில் உள்ள ஒரு கோவில் திருமண மண்டபத்தில் செப்டம்பர் 8 ஆம் தேதி திருமணம் நடப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
மோசடிக் கல்யாணம்:
அதை நம்பி மணப்பெண் வீட்டார் வியாசர்பாடியில் உள்ள அந்த திருமண மண்டபத்துக்கு வந்தனர். ஆனால் அங்கு வேறு ஒரு திருமண வரவேற்பு நடந்து கொண்டிருந்தது. மாப்பிளை வீட்டார் யாரும் இல்லை. கொண்டு வந்திருந்த திருமண சீர்வரிசை பொருட்களை வைத்து கொண்டு தவிப்புடன் காத்து இருந்தனர்.
போலீசில் புகார்:
காலையிலும் மணமகன் மற்றும் அவரது வீட்டார் யாரும் திருமண மண்டபத்துக்கு வரவில்லை. இந்த மோசடி குறித்து பெண் வீட்டார் போலீசில் புகார் செய்தனர். மணமகன் தெரிவித்து இருந்த விலாசத்தில் போலீசார் சென்று பார்த்த போது அது மணமகன் வீடு இல்லை என்பதும், போலியான விலாசம் கொடுத்து இருந்ததும் தெரிய வந்தது.
போலி மணமகன் கைது:
தீவிர விசாரணைக்கு பிறகு மணமகன் விக்னேஷ், அவரது தாயார் காவேரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். போலியான அழைப்பிதழ் அடித்து மணப்பெண் வீட்டாரை ஏமாற்றிய மணமகன், அவரது தாயார் ஆகியோரிடம் எம்.கே.பி. நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாலமுரளி, சீனிவாசன் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.
வரதட்சணைக்காக மோசடி:
அப்போது பெண் வீட்டார் பேசியபடி ரூபாய் 1 லட்சம் ரொக்கம், 10 பவுன் நகை ஆகியவற்றை மாப்பிள்ளை வீட்டார் அபகரிப்பதற்காக இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
அப்பா பெயரில் குழப்பம்:
விக்னேசின் தந்தை இஸ்லாம் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவரது பெயரை மாரிமுத்து என்று போலியாக குறிப்பிட்டு இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டது.
கைகொடுத்த உறவு:
திருமணம் நின்றதால் மணப்பெண் நாகவள்ளியும் உறவினர்களும் கவலையில் ஆழ்ந்தனர். திருமணம் நின்றது பற்றி வியாசர்பாடி ஜாபர்நகரில் வசிக்கும் நாகவள்ளியின் தூரத்து உறவினர் குப்புசாமியிடம் தெரிவித்தனர். அவர் தனது மகன் மகேஷ்குமாருக்கு நாகவள்ளியை திருமணம் செய்ய வைக்க முன் வந்தார்.
திடீர் திருமண ஏற்பாடு:
மகேஷ்குமார் ஆட்டோ டிரைவர். அவர் ஆட்டோ ஓட்டி கொண்டிருந்தார். திடீர் திருமண ஏற்பாடு பற்றி பெற்றோர் மகேஷ்குமாருக்கு தகவல் கொடுத்தனர். உடனே மகேஷ்குமார் அரை சவரன் தாலி, பட்டு வேட்டி, பட்டுப்புடவை வாங்கி கொண்டு திருமணத்துக்கு தயாராக வந்தார்.
அதே கோவிலில் கல்யாணம்:
திருமணம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அதே கோவிலில் மாலை 4 மணிக்கு மகேஷ்குமார் மற்றும் நாகவள்ளி திருமணம் நடந்தது. புதுமணமக்கள் சந்தோஷமாக அங்கிருந்து கிளம்பினர்.