புதுச்சேரியில் மாலை 4 மணி வரை 71.6 சதவீத வாக்குப் பதிவு
புதுச்சேரி: புதுச்சேரியில் 3 மணி நிலவரப்படி 71.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுவையில் காலையில் விறுவிறுப்பாக இருந்தது வாக்குப் பதிவு. இடையில் மழை குறுக்கிட்டதால் தொய்வடைந்தது இருப்பினும் பின்னர் வாக்குப் பதிவு மீண்டும் விறுவஇருப்பானது
காலை 9 மணி நிலவரப்படி 13 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 11 மணி நிலவரப்படி அங்கு 27.51 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. 11.30 மணிக்கு அது 30.44 சதவீதமாக உயர்ந்தது. பிற்பகல் 1 மணி நிலவரப்படி அங்கு 50 சதவீத வாக்குகள் பதிவாகின. மாலை 3 மணி வாக்கில் இது 66.85 சதவீதமாக இருந்தது. 4 மணிக்கு இது 71.6 சதவீதமாக உயர்ந்தது.
ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடியில் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பதற்காக ஆண், பெண் வாக்காளர்கள் 6.30 மணிக்கே வந்து வரிசையில் நின்றனர். வெயில் அச்சத்தில் காலையிலே அவர்கள் வந்து விட்டனர். ஆனால் அதற்கு நேர் மாறாக மழை பெய்ததுடன், சிதோஷ்ணமும் ஜில்லென்று இருந்ததால் வாக்காளர்கள் உற்சாகமடைந்தனர்.
புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி டாக்டர் வி.கந்தவேலு பெருமாள் கோயில் தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா, மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான டாக்டர் பி.ஜவஹர் ஆகியோரும் தங்கள் மனைவியருடன் மதர் தெரசா சுகாதார பட்டமேற்படிப்பு மைய வாக்குச்சாவடியிலும் வாக்களித்தனர்.
முதல்வர் ரங்கசாமி கதிர்காமம் தொகுதியில் திலாசுப்பேட்டை அரசுத் தொடக்கப் பள்ளியில் வாக்களித்தார்.
கடந்த 2011-ம் ஆண்டு தேர்தலின் போது புதுச்சேரி மாநிலத்தில் 86 சதவீதம் வாக்குக்கள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ் - திமுக, அதிமுக, பாஜக, மக்கள் நலக் கூட்டணி தமிழகத்தைப் போலவே பலமுனை போட்டி நிலவுகிறது. உண்மையான போட்டி என்ஆர் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணிகளுக்கு இடையில்தான் நிலவுகிறது.
இங்கு மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. 30 தொகுதிகளிலும் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது. 344 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
புதுவையில் 9,41,935 வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆண் வாக்காளர்கள் 4,47,444 பேர். பெண் வாக்காளர்கள் 4,94,412. மூன்றாம் பாலின வாக்காளர்கள் 79.
30 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்காக 930 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கென தனியாக 17 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடிகளில் 5,382 தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடிகளில் முதியோர், மாற்றுத்திறனாளிகள் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்கை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அவர்களுக்கு உதவுதற்கு ஆயிரத்து 176 மாணவ தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். வாக்காளர்கள் தேர்தல் ஆணையம் அளித்த பூத் சிலிப் அல்லது தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.
வெயிலின் தாக்கம் கருதி வாக்காளர்களுக்கு குடிநீர், தேவையான இடங்களில் பந்தல் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் பாதுகாப்புக்கென 30 கம்பெனி துணை ராணுவப்படையின் புதுவைக்கு வந்துள்ளனர். இந்த படையினர் அனைத்து வாக்குச் சாடிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 148 பதற்றமான வாக்குச் சாடிகளில் 236 பகுதிகள் பதட்டம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு கூடுதலாக துணை ராணுவப்படையினர், போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குப்பதிவு தொடங்கிய காலை 7 மணியில் இருந்தே ஏராளமான வாக்காளர்கள் ஆர்வத்துடன் வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்.