சென்னை புறநகரில் கொடி கட்டிப்பறக்கும் விபசாரம்: கணவன் மனைவியாக நடித்த தரகர்கள் கைது
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் வீடுகளை வாடகைக்கு எடுத்து விபசாரத்தொழில் செய்வது அதிகரித்து வருகிறது. தாம்பரத்தில் கணவன் மனைவி போல வந்து வீடு வாடகைக்கு எடுத்து விபசார விடுதி நடத்திய கும்பலைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். அங்கிருந்த மும்பை அழகிகள் 2 பேர் மீட்கப்பட்டனர்.
மேற்குதாம்பரம் சி.டி.ஓ காலனி சாய்நகர் 2-வது தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு அதிக ஆண்கள் வந்து செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
பரங்கிமலை துணை கமிஷனர் சரவணன் உத்தரவின்பேரில் தனிப்படையினர் அங்கு சோதனை செய்தனர். அப்போது கணவன் மனைவி போல நடித்து வீடு வாடகைக்கு எடுத்து விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதில் விபசார கும்பல் தலைவன் குணா என்பவர் தப்பி சென்றுவிட்டார்.அவரது கூட்டாளி செந்தில் (வயது 46) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அழகிகள் மீட்பு
அங்கிருந்த அழகிகள் மும்பையைச் சேர்ந்த தஸ்லிம் அன்சர் (25), அனிதா தேவராவ் (30) ஆகிய 2 பேரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். அங்கு உல்லாசம் அனுபவிக்க வந்த 3 வாலிபர்களையும் விசாரணைக்கு போலீசார் அழைத்துச்சென்றனர்.
புறநகரில் விபசாரத்தொழில்
கடந்த ஜூலை மாதம் சென்னை புறநகர் பகுதிகளான செம்பாக்கம், மாம்பாக்கம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் ஆடம்பர ஒதுக்குப்புற பங்களா வீடுகளில் அழகிகளை அடைத்து வைத்து, விபசார தொழில் நடத்தி வந்தது போலீசுக்கு தெரியவந்தது. விபசார தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார், அந்த பங்களா வீடுகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
தரகர்கள் கைது
இந்த சோதனையில் விபசாரத்தில் தள்ளப்பட்டு, பங்களாக்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 6 இளம்பெண்களை போலீசார் பத்திரமாக மீட்டு, அரசு இல்லத்தில் சேர்த்தனர். ராஜேஷ், முல்லா, தாராசிங், ரகுமாமிலா ஆகிய தரகர்கள் கைது செய்யப்பட்டனர்.
தப்பி ஓடிய தரகர்கள்
முக்கிய தரகர்களான நந்து என்ற நந்தகுமார், அவரது சகோதரர் ராஜூ ஆகிய இருவரும் தப்பி ஓடிவிட்டனர். நந்து விபசார குற்றத்துக்காக ஏற்கனவே குண்டர் சட்டத்தில் சிறைக்கு போனவர் என்பது குறிப்பிடத்தக்கது.
புறநகர் வீடுகள்
சென்னை புறநகரின் ஒதுக்குபுறமான பல இடங்களில் வீடுகள் பல இருந்தும் போதிய பாதுகாப்பு, போக்குவரத்து வசதி இல்லாத காரணத்தால் பல இடங்களில் கட்டிய வீடுகளை வாடகைக்கு விட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிவைக்கும் கும்பல்கள்
வீடு வாடகைக்கு என போர்டு வைத்து அதில் செல்போன் எண்ணையும் போட்டு விட்டு வீட்டு உரிமையாளர்கள் வந்து விட அது போன்ற வீடுகளை விபசார கும்பல்கள் குறி வைக்கின்றன.கணவன், மனைவி போல சென்று வீடு பார்க்கும் இந்த கும்பல் வீட்டு உரிமையாளர் கேட்கும் அதிகபட்ச வாடகையை உடனே கொடுத்து விடுகின்றனர்.
உறவினர்கள் போர்வையில்
வீட்டை பிடித்து அங்கு குடும்ப உறுப்பினர்கள் போல பெண்களை வரவழைத்து வாடிக்கையாளர்களை அழைத்து விபசாரம் செய்யும் இந்த கும்பல், 2 மாதத்திற்குள் வீட்டு உரிமையாளரிடம் தண்ணீர் சரியில்லை, ரோடு சரியில்லை என சாக்குபோக்கு சொல்லி போலீசில் சிக்குவதற்குள் அடுத்த ஏரியாவுக்கு தப்பி விடுகின்றனர். எனவே சென்னை புறநகர் பகுதிகளை குறிவைத்துள்ள விபசார கும்பலிடம் வீடு வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் உஷாராக இருக்கவேண்டும் என போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.