லாட்ஜிங், ஏடிஎம், போன், குடிநீர், காவலுக்கு போலீஸ்... பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை!
சென்னை: சென்னை பஸ் ஸ்டாண்டுகளில் நிம்மதியாக நின்று தொழில் செய்ய முடியவில்லை. எனவே பாலியல் தொழில் செய்வதற்கு வசதியாக மின்சாரம், குடிநீர், கிளினிக், பெண் காவலர் பாதுகாப்பு, தங்கும் வசதி, கேண்டீன், போன், பண பரிமாற்றத்துக்கு வங்கி, ஏ.டி.எம். வசதி, போக்குவரத்து வசதி உள்பட சகல வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான இடத்தை அரசு வழங்க வேண்டும் என்று பாலியல் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது இந்தக் கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தனர். மேலும், இவற்றை அரசு ஏற்பாடு செய்து தருவதோடு, பாலியல் தொழிலை செய்ய பாதுகாக்கப்பட்ட தனி பகுதியையும் ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னையில் நேற்று இந்திரா பெண்கள் முன்மாதிரி கல்வியாளர் நலச் சங்கத்தின் கருத்தரங்கக் கூட்டம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு சங்கத் தலைவர் பி.பேபி தலைமை தாங்கினார். செயலாளர் கே.கலைவாணி, பொருளாளர் பி.என்.சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகமூடியுடன் நிர்வாகிகள்
இந்த கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களசை் சந்தித்தனர் நிர்வாகிகள். அப்போது செயலாளர் கலைவாணியைத் தவிர மற்ற நிர்வாகிகள் முகத்தை மறைக்கும் வகையில் மாஸ்க் போட்டிருந்தனர்.
4 மாவட்டங்களில் 2313 பாலியல் தொழிலாளர்கள்
சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மதுரை ஆகிய 4 மாவட்டங்களில் சங்கத்தை சேர்ந்த 2,312 பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள்.
சென்னையில் மட்டும் 1800 பேர்
சென்னையில் மட்டும் 1,800 பாலியல் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். பாலியல் தொழிலை சட்ட விரோத தொழில் என்று சொல்வதே தவறு ஆகும்.
கையைப் பிடித்து இழுத்தால்தான் தவறு
வலுக்கட்டாயமாக கையை பிடித்து இழுத்து தொழிலுக்கு அழைத்தால் தான் தவறு. ஆனால் நாங்கள் யாரும் அப்படிச் செய்வதில்லை.
பஸ் ஸ்டாண்ட்- பீச்சில் தொழில் செய்ய முடியவில்லை
பாலியல் தொழிலாளர்கள் தியாகராய நகர், பாரிமுனை, மெரினா கடற்கரை ஆகிய இடங்களில் நின்று தொழில் செய்ய முடியவில்லை. போலீசார் ‘கெடுபிடி' அதிகமாக உள்ளது. இரவுநேரங்களில் பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது.
அடிப்படை வசதிகளுடன் கூடிய அறைகள்
எனவே பாலியல் தொழில் செய்வதற்காக அத்தியாவசிய வசதிகளான மின்சாரம், குடிநீர், கிளினிக், பெண் காவலர் வசதி, தங்கும் வசதி, கேண்டீன், போன் வசதி, பண பரிமாற்றத்துக்காக வங்கி, மற்றும் ஏ.டி.எம். வசதி, போக்குவரத்து வசதி உள்பட சகல வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான இடத்தை அரசு வழங்க வேண்டும்.
பிரச்சினையே இருக்காது...
பாலியல் தொழில்புரிவதற்கு பாதுகாப்பான இடம் ஒதுக்கப்படுவதன் மூலமாக காவல்துறை பிரச்சினை இருக்காது. மக்களால் இடையூறு இருக்காது.
ஏமாற்றவும் முடியாது
வாடிகையாளர்கள் ஏமாற்ற முடியாது, தரகரால் பிரச்சினை இருக்காது. மேலும் தனி வீடுகளைப் பிடித்து பெண்களை வைத்து நடத்தப்படும் விபச்சாரமும் தடைபடும்.
கைத்தொழில் பயிற்சியும் தேவை
மேலும், பாலியல் தொழிலாளர்களுக்காக வழக்கறிஞர் உதவி மையம், சுயதொழில் செய்வதற்கு கைத்தொழில் பயிற்சி, கணினி பயிற்சி, ஓட்டுனர் பயிற்சி மையத்தையும் ஏற்படுத்தி தர வேண்டும் என்றார் கலைவாணி.