சென்னையில் தங்கை முறை சிறுமியை திருமணம் செய்த அண்ணன்.. போலீசில் புகார்
சென்னை: 17 வயது சிறுமிக்கு அவரது பெரியம்மா மகனை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, எண்ணூர், பாரதியார் நகரை சேர்ந்தவர் ரவி (45). இவரது மனைவி மனைவி சாந்தி (42). ரவி கூலி வேலை செய்கிறார், சாந்தி பொம்மை விற்பனை செய்து வருகிறார்.
இவர்களுக்கு 19 மற்றும் 17 வயதில் இரு மகள்கள் உள்ளனர். 2வது மகள் தி.நகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் வேலை முடித்துவிட்டு, மயிலாப்பூரில் உள்ள பெரியம்மா மாரியம்மாள் வீட்டுக்கு அடிக்கடி சென்று தங்குவது வழக்கம்.
இந்நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன் வேலைக்கு சென்ற சிறுமி, வீடு திரும்பவில்லை. பெரியம்மா வீட்டிலேயே இருப்பார் என்பதால் பெற்றோரும் தேடவில்லை. அதன்பிறகு 3 நாட்கள் கழித்து, மயிலாப்பூரில் வசித்து வரும் மாரியம்மாள் வீட்டில் இருந்து சாந்திக்கு செல்போனில் அவரது உறவினர் ஒருவர், உனது மகளுக்கும் மாரியம்மாள் மகன் தீனதயாளனுக்கு (27) திருமணம் செய்துள்ளோம் என கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சாந்தி மயிலாப்பூரில் உள்ள மாரியம்மாள் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்தவர்கள் சாந்தியை வீட்டுக்குள்ளே விடாமலும், அவரது மகளை பார்க்க விடாமலும் அடித்து திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மயிலாப்பூர் போலீசில் சாந்தி புகார் கொடுக்க சென்றார். அங்கிருந்த போலீசார், நீங்கள் எண்ணூரில்தான் புகார் கொடுக்க வேண்டும் என கூறி திருப்பி அனுப்பினர். இதனால் எண்ணூர் போலீசில் சாந்தி புகார் அளித்தார்.
ஆனால் புகார் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று சாந்தி புகார் கூறிவருகிறார். காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் புகாரை பெற்று கொண்டு, அது எந்த எல்லைக்கு உட்பட்டதோ, அந்த போலீசாரிடம் புகாரை மாற்றம் செய்துவிட்டு விசாரணையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பது சென்னை மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவு. ஆனால், கமிஷனரின் உத்தரவை மதிக்காமல் மயிலாப்பூர் மற்றும் எண்ணூர் போலீசார் செயல்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.