தங்கையை பலாத்காரம் செய்த சகோதரன் - திருச்சியில் கண் தெரியாத பெண்ணை கர்ப்பமாக்கிய விபரீதம்!
திருச்சி: திருச்சியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது சொந்த தங்கையை பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி அருகே உள்ள ராம்ஜிநகர் எசனைப்பட்டி கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கண்பார்வையற்றவர். இவரது கண்பார்வையற்ற பெற்றோர் ஊதுபத்தி வியாபாரம் செய்து வருகின்றனர். அப்பெண் நாமக்கல்லில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது வீட்டிற்கு வந்து பெற்றோரை பார்த்து விட்டு செல்வார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த அவர், வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவரது பெற்றோர் இனாம் குளத்தூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அப்பெண் 9 மாத கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்குள்ள டாக்டர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் அடுத்த மாதம் அப்பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் என்று தெரிவித்தனர். இதனால் அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் இது குறித்து ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ஹேமலதா மற்றும் போலீசார் திருச்சி அரசு மருத்துவமனைக்குச் சென்று அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பரபரப்பு தகவல் கிடைத்தது.
அப்பெண்ணின் பெற்றோர் கண் பார்வையற்றவர்கள் என்பதால் அவர்களுக்கு தேவையான உதவியை அப்பெண்ணின் பெரியப்பா மகனும், ஆட்டோ டிரைவருமான எசனைப்பட்டியை சேர்ந்த ஐய்யப்பன் என்பவர் செய்து வந்துள்ளார். ஒரு முறை அப்பெண் ஊருக்கு வந்திருந்தார். அப்போது அவரது பெற்றோர் ஊதுபத்தி வியாபாரத்திற்காக வெளியே சென்று விட்டனர். அந்நேரம் அங்கு சென்ற ஐய்யப்பன், அப்பெண்ணின் வாயை பொத்தி பலாத்காரம் செய்ததும், அதனால் அவர் கர்ப்பமானதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஐய்யப்பனை கைது செய்தனர். பின்னர் அவரை திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.