திருச்சி அருகே கொடூரம்.. பட்டப்பகலில் அண்ணன், தம்பி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை
திருச்சி அருகே இன்று அண்ணன்-தம்பி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி: திருச்சி அருகே அண்ணன், தம்பியை ஓட ஓட விரட்டி கொன்ற 6 பேர் கும்பல், நண்பரையும் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி, ஜீயபுரம் அருகே உள்ள எட்டரை கோப்பு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அம்சவள்ளி. இவர்களது மகன்கள் ராஜா (வயது 30), பூபதி (25). இவர்கள் இருவரும் அயிலாப்பேட்டையை சேர்ந்த இவர்களது நண்பர் வடிவேலுவுடன் கடந்த 28ம் தேதி இரவு தீபாவளி பண்டிகையின் போது அங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது அவர்களுக்கும் அங்கு மது அருந்தி கொண்டிருந்த கோப்பு நடுத்தெருவை சேர்ந்த நாகராஜ் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் கட்டி உருண்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் சண்டையை விலக்கி விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை ராஜா, பூபதி, நண்பர் வடிவேலு ஆகியோர் கோப்பு பாலத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது நாகராஜ், அவரது நண்பர் குழுமணி கோபால் மற்றும் 4 பேர், 2 கார்களில் அங்கு வந்தனர். அவர்கள் கையில் அரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்தனர். திடீரென அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ராஜாவையும், பூபதியையும் சரமாரி அரிவாளால் வெட்டினர். இதில் 2 பேருக்கும் உடலில் பல இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனை தடுத்த வடிவேலையும் வெட்டினர்.
இதில் பலத்த வெட்டுக் காயமடைந்த பூபதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். ராஜா வெட்டுக் காயத்துடன் கும்பலிடம் இருந்து தப்பியோடினார். இருப்பினும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தி சென்று சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது. வடிவேலு வெட்டுக்காயங்களுடன் தப்பினார்.
தகவலறிந்து வந்த போலீசார், உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த வடிவேலு சிகிச்சை பெற்று வருகிறார். தப்பியோடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.