புதுக்கோட்டை: அண்ணன் தம்பியை வெட்டிக்கொன்ற மணல் கடத்தல் கும்பல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே மணல் கடத்தல் கும்பலைக் காட்டி கொடுத்த அண்ணன் தம்பிகளை மர்மக்கும்பல் வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவூர் ஊராட்சி அருகே உள்ள செங்களாக்குடியை சேர்ந்தவர் துரைராஜ். நாட்டாமை. இவரது மகன்கள் டிரைவர் கார்த்திக் (வயது 30). ராஜேஷ் (26).
இவர்கள் இருவரும் நேற்றிரவு 12.30 மணி அளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது இவரது உறவினரான ராம்குமார் என்பவர் கார்த்திக்கையும், ராஜேசையும் அருகில் உள்ள கோரையாற்றில் வாகனங்களில் மணல் அள்ளுவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். கார்த்திக்கும், ராஜேசும் செங்களாக்குடியில் இருந்து கோரையாற்றுக்கு தனி தனி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் 2 பேரும் கோரையாற்றுக்கு அருகில் சென்றதும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நடந்து சென்றனர். அப்போது கும்பலாக வந்த சிலர் கார்த்திக்கும், ராஜேசையும் தடுத்து நிறுத்தினர். கண்ணிமைக்கும் நேரத்தில் அவர்கள் 2 பேரையும் அந்த கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த கார்த்திக்கும், ராஜேசும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களை அழைத்து சென்ற ராம்குமாரும், அந்த கும்பலும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது.
அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் 2 பேர் படுகாயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து மாத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் ரத்தம் வடிந்த படி கிடந்த அவர்கள் 2 பேர் சடலத்தையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த கொடுர கொலைக்கு முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
கொலை செய்யப்பட்ட கார்த்திக்கும், ராஜேசும் கோரையாற்றில் இருந்து மணல் அள்ளி வாகனங்களில் கடத்தப்பட்டது குறித்து வருவாய் துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்து வந்துள்ளனர். இதில் அதே ஊரை சேர்ந்த அவர்களின் உறவினரான கணேசன் என்பவர் மகன் ராஜேந்திரன் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தனது டெம்போவில் மணல் ஏற்றி செல்லும் போது விராலிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்து போலீசில் ராஜேசும், கார்த்திக்கும் மாட்டி விட்டுள்ளனர். இதில் ராஜேந்திரனுக்கும், கார்த்திக் குடும்பத்தினருக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில் தான் ராஜேந்திரன் (வயது 30), ஜெயராம் (26), முத்தழகு (24)ஆகிய 3 பேரும் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்திருப்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
மேலும் கொலையாளிகளை பிடிக்க புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். மேலும் துப்பறியும் நாய் மார்ஷல் புதுக்கோட்டையில் இருந்து வர வழைக்கப்பட்டு துப்பு துலக்கினார்கள். நாய் மார்ஷல் மோப்பம் பிடித்த படி ராஜேந்திரன் வீட்டு முன்பு படுத்துக்கொண்டது.
நள்ளிரவில் நாட்டாண்மை மகன்கள் 2 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதால் ஆவூர் பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் மேலும் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க ஏராளமான ஆயுதம் தாங்கிய போலீசார் உட்பட ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் தீவிரமாக அந்த பகுதியில் ரோந்து சுற்றியும் வருகிறார்கள். ஆனாலும் அந்த பகுதியில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.