திமுக, அதிமுக சார்பில் களமிறங்கியுள்ள அண்ணன்-தம்பி.. வேலூர் தொகுதியில் சுவாரசியம்
வேலூர்: வேலூர் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளவர்கள் கூட பிறந்த அண்ணன்-தம்பிகள் என்பதால் அங்கு தேர்தல் களம் சுவாரசியமாகியுள்ளது.
வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளராக ப.நீலகண்டனை ஜெயலலிதா அறிவித்தார். நீலகண்டன் 1985ம் ஆண்டு முதல் அதிமுகவில் உறுப்பினராக உள்ளார்.
2001ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் ஆற்காடு தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏவாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது வேலூர் மேற்கு மாவட்ட பொருளாளராக உள்ளார்.
இந்நிலையில் திமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் வேலூர் தொகுதி வேட்பாளராக ப.கார்த்திகேயன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கார்த்திகேயன் 2001ம் ஆண்டு முதல் திமுகவில் உள்ளார். வேலூர் மாநராட்சியின் முதல் மேயராக 3 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது வேலூர் மாநகர திமுக செயலாளராக உள்ளார்.
ப.நீலகண்டனும், ப.கார்த்திகேயனும் கூட பிறந்த அண்ணன் தம்பிகள் என்பதால் வேலூர் தொகுதியில் தேர்தல் களம் சுவாரசியமாகியுள்ளது.