'அண்ணன்' கருணாநிதியை எதிர்த்து பிரசாரம் செய்ய வருவாரா 'தம்பி' எடியூரப்பா?
சென்னை: கருணாநிதியை வாய் நிறைய அண்ணன் என்று அழைத்த கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, தற்போது, அவருக்கு எதிராகவே தமிழக தேர்தலில் பிரச்சாரம் செய்ய வேண்டிவந்துள்ளது.
பெங்களூர், அல்சூர் பகுதியிலுள்ள, தமிழ்ச்சங்க கட்டிடம் அருகே அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலையை 18 ஆண்டுகளாக திறக்க முடியாமல் இருந்து வந்தது.
பெங்களூரில் பொது நிகழ்ச்சியொன்றில் நான் பங்கேற்பதாக இருந்தால், அது திருவள்ளுவர் சிலை திறப்பு விழாவாகத்தான் இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியபடி இருந்தார்.
திருவள்ளுவர் சிலை திறப்பு
கருணாநிதியின் சவாலை நிறைவேற்ற உதவியது எடியூரப்பாதான். கர்நாடக முதல்வராக பாஜகவை சேர்ந்த எடியூரப்பா பதவி வகித்த காலத்தில்தான், கன்னட சங்கங்கள் சிலவற்றின் எதிர்ப்பையும், காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியினர் மற்றும் பாஜகவிலேயே வட கர்நாடகாவை சேர்ந்த சில தலைவர்களின் எதிர்ப்பையும் மீறி திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டது.
கருணாநிதி தலைமை
2009ம் ஆண்டு நடந்த சிலை திறப்பு விழாவுக்கு தலைமை தாங்க அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதியை அழைத்திருந்தார் கர்நாடக முதல்வராக பதவி வகித்த எடியூரப்பா. விழாவில் பேசிய எடியூரப்பா, கருணாநிதி பற்றியும், தமிழர்கள் பற்றியும் மிகவும் உயர்வாக பேசினார்.
அண்ணன், தம்பி
விழாவில், கன்னடத்தில் பேசிய எடியூரப்பா, கருணாநிதியை 'அண்ணாவரு' (அண்ணன்) என்று அன்போடு அழைத்தார். தமிழில் பேசிய கருணாநிதியும், சளைக்கவில்லை. அப்போது மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்தபோதும்கூட, பாஜக முதல்வரான எடியூரப்பாவை, 'தம்பி' என்றுதான் அழைத்தார்.
சரிந்த தலைவர்கள்
எடியூரப்பாவும், கருணாநிதியும், பரஸ்பரம் சகோதர பாசத்தை பொழித்தபோது, பொதுமக்கள் கைதட்டல்கள் அடங்க வெகு நேரம் ஆனது. இந்த நிகழ்வுக்கு பிறகு, உட்கட்சியினர் நடத்திய கலகத்தால் எடியூரப்பா பதவியை காப்பாற்ற போராடி தோற்றுப்போனார். திமுகவோ 2ஜி, ஈழம் என அடுத்தடுத்து சரிவுகளை சந்தித்து ஆட்சியை இழந்தது.
பாஜக தலைவர் எடியூரப்பா
இந்நிலையில், தற்போது தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், எடியூரப்பா கர்நாடக பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2018 கர்நாடக சட்டசபை தேர்தலை எடியூரப்பா தலைமையில்தான் பாஜக சந்திக்க உள்ளது. அவரே முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.
பிரச்சாரம்
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. பாஜக தனி ஆவர்த்தனம் வாசித்துக்கொண்டுள்ளது. ஏற்கனவே தேர்தலை எதி்ர்கொள்வது எப்படி என்று கர்நாடக பாஜகவினரிடம் பாடம் கற்று திரும்பியுள்ள தமிழக பாஜகவினர், எடியூரப்பாவை தமிழக தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்க வாய்ப்புள்ளது.
எதிர் தாக்குதல்
தமிழர்கள் மத்தியில் எடியூரப்பா பிரபலமானவர் என்பதால், சென்னை உள்ளிட்ட சில பகுதிகளில் எடியூரப்பா பிரச்சாரம் செய்ய வாய்ப்புள்ளது. அப்போது அண்ணன் கருணாநிதியின் கட்சியையும், அவரையும், தம்பி எப்படி தாக்கி பேசப்போகிறார் என்று பார்க்க காத்திருக்கிறார்கள், தமிழக வாக்காள பெருமக்கள்.