பிஎஸ்என்எல் வழக்கில் ஆஜராக மாறன் சகோதரர்களுக்கு விலக்கு அளிக்கக் கூடாது- சிபிஐ மீண்டும் எதிர்ப்பு
பிஎஸ்என்எல் வழக்கில் ஆஜராவதிலிருந்து மாறன் சகோதரர்களுக்கு விலக்கு அளிக்கக் கூடாது என்று சிபிஐ மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சென்னை : ரூ.1.78 கோடி மோசடி செய்த பிஎஸ்என்எல் வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து மாறன் சகோதரர்களுக்கு விலக்கு அளிக்கக் கூடாது என்று சிபிஐ மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் போது மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்திலிருந்து இருந்து, கோபாலபுரம் , போட் கிளப் சாலையில் இருக்கும் தனது வீடுகளுக்கும் சன் டிவி அலுவலகத்துக்கும் கேபிள் பதித்து, தொலைபேசி இணைப்புகளை கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதால் அரசுக்கு ரூ.1.78 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ தரப்பு குற்றம் சாட்டி இருந்தது.
இந்த வழக்கானது சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதிலிருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட ஏழு பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்கு சென்னை சிபிஐ நீதிமன்ற நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், சன் குழும தலைவர் கலாநிதி மாறன், பி.எஸ்.என்.எல். ஓய்வுபெற்ற அதிகாரிகள் வேலுச்சாமி, பிரம்மநாதன் ஆகியோர் ஆஜராகவில்லை.
தயாநிதி மாறனின் சிறப்பு தனிச்செயலாளர் கௌதமன், சன் டிவி தலைமை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், சன் டிவி எலக்ட்ரீசியன் ரவி ஆகிய மூவர் மட்டும் ஆஜரானார்கள். இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து ஆஜராவதிலிருந்து விலக்கு கோரி மாறன் சகோதரர்கள் உள்ளிட்ட நால்வரும் தாக்கல் செய்த மனுவை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கவும், நீதிமன்றத்திலிருந்து ஆஜராவதில் இருந்து விலக்குக் கோரியும் 7 பேரும் கடந்த 10-ஆம் தேதி மனு தாக்கல் செய்தனர். அதேசமயம் சிபிஐயும் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்தது. அதை ஆய்வு செய்து விளக்கமளிக்க 3 வார கால அவகாசம் கோரி மாறன் சகோதரர்கள் உள்பட 7 பேர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 10 நாள்களுக்கு மட்டுமே கால அவகாசம் வழங்கி வழக்கை இன்றைய தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி.
அதன்படி இன்று சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் பிஎஸ்என்எல் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மாறன் சகோதரர்கள் நீதிமன்றத்திலிருந்து ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க சிபிஐ மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து மாறன் சகோதரர்கள் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரும் வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.