அக்டோபர் 1 முதல் அதிவேக இணைய சேவையை அறிமுகம் செய்கிறது பி.எஸ்.என்.எல்.
சென்னை : பி.எஸ்.என்.எல். இணைய சேவையை, அக்டோபர் 1-ஆம் தேதி முதல், நொடிக்கு 2 எம்பி அதிவேகத்தில் வாடிக்கையாளர்கள் பெறலாம் என, தமிழக தொலைபேசி வட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக தொலைபேசி வட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது...
பி.எஸ்.என்.எல், தற்போது குறைந்தபட்சம் நொடிக்கு 512 கே.பி.பி.எஸ்.(Kbps) வேகத்தில் இணைய சேவையை வழங்கி வருகிறது. அதிக வாடிக்கையாளர்களை கவர, தனது இணைய சேவையின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, பி.எஸ்.என்.எல். நிறுவன இணைய சேவையின் வேகம் 4 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 1-ஆம் தேதி முதல் குறைந்தபட்சம் நொடிக்கு 2 எம்பி அதிவேகத்தில் இணைய சேவையை பி.எஸ்.என்.எல். வழங்கும். எந்தவிதமான கூடுதல் கட்டணம் இன்றி, அதிக வேகத்தில் இணைய சேவையை வாடிக்கையாளர்கள் பெறலாம்.
மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, "ப்ரீபெய்டு' வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், "புது வசந்தம்' என்கிற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்தத் திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்கள் வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் (life time validity) வசதியைப் பெற முடியும்.
விநாயகர் சதுர்த்தி நாளான நாளை (செப் 17) முதல் இத்திட்டம் அறிமுகமாகிறது. இந்தத் திட்டத்தில் உள்ளூர், வெளியூர் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 48 பைசா வசூலிக்கப்படும். முதல் மூன்று மாதங்களுக்கு, 1,000 நொடி அளவுக்கு இலவச அழைப்பு கிடைக்கப்பெறும். மூன்று மாதங்களுக்கு, மாதத்துக்கு 25 என்ற அளவில் எஸ்.எம்.எஸ், 50 எம்பி அளவுக்கு ஒரு மாதம் இணைய வசதி ஆகியவற்றையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.
இந்தத் திட்டத்தில் இணைய விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ. 15 செலுத்தினால் போதுமானது (சிம் கார்டு கட்டணமும் அடங்கும்). கூடுதலாக பல்வேறு சிறப்பம்சங்களையும் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.