தயாநிதி மாறனின் குட்டை உடைத்த பி.எஸ்.என்.எல். ஊழியருக்கு நீதி கிடைத்தது
சென்னை: முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் சட்டவிரோதமாக 323 தொலைபேசி இணைப்புகள் வைத்திருந்த விவகாரத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த பி.எஸ்.என்.எல். ஊழியர் சி.கே. மதிவாணனுக்கு தற்போது நீதி கிடைத்துள்ளது.
முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் சட்டவிரோதமாக 323 பி.எஸ்.என்.எல். இணைப்புகள் வைத்திருந்ததை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர் பி.எஸ்.என்.எல். ஊழியர் சி.கே. மதிவாணன். அவர் கடந்த 2011ம் ஆண்டு மாறன் சகோதரர்கள் மற்றும் அவர்களுக்கு சட்டவிரோதமாக தனது பெயரில் இணைப்புகள் வழங்கிய பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் எம்.பி. வேலுச்சாமி ஆகியோருக்கு எதிராக போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில் அவர் கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். மாறன் சகோதரர்களுக்கு எதிராக போராடிய அவருக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து மறுவிசாரணை நடத்த பிஎஸ்என்எல் சிஎம்டி ஆர்.கே. உபத்யாய தலைமை பொது மேலாளர் ஏ. பாலசுப்பிரமணியனுக்கு உத்தரவிட்டார். அவர் விசாரணை நடத்தி மதிவாணனுக்கு உடனடியாக ஓய்வூதியம் வழங்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பின் கூடுதல் துணை செயலாளராக இருந்த மதிவாணன் தயாநிதி மாறன் ரகசியமாக வைத்திருந்த தொலைபேசி இணைப்புகள் குறித்த விஷயத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.