மாமல்லபுரம் பக்கிங்காம் கால்வாய் பாலம் உடையும் அபாயம்... வாகனங்கள் செல்ல தடை
மாமல்லபுரம்: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பக்கிங்காம் கால்வாயில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் அந்த பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் இந்த பாலத்தின் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் பக்கிங்காம் கால்வாய் பாலத்தின் வழியாக தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், காஞ்சீபுரம், வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள், மற்றும் லாரிகள் இந்தப் பாலத்தின் வழியாகவே வந்து செல்கின்றன. பக்கிங்காம் கால்வாயில் கரை புரண்டு ஓடும் காட்டாற்று வெள்ளம் அகல்பாக்கம் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது.
ஓடும் நீரின் அளவு மிக வேகமாக உள்ளதால் பாலத்தின் ஒரு பகுதி அரிக்கப்பட்டு உடையும் நிலையில் உள்ளது. இதனையடுத்து காஞ்சீபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில் அதிகாரிகள் இந்த பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பாலத்தின் ஒரு பகுதி உடையும் நிலையில் இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள் பக்கிங்காம் பாலத்தில் போக்குவரத்து செல்ல தடை விதித்தனர்.
இதையடுத்து மாமல்லபுரம் போக்குவரத்து போலீசார், பக்கிங்காம் பாலத்தில் தற்காலிக தடுப்புகள் அமைத்து வாகனங்கள் செல்ல தடை விதித்தனர். மாமல்லபுரம் வரும் அரசு பஸ்கள் மற்றும் லாரிகள் அனைத்தும், ‘பைபாஸ்' சாலை வழியாக நகருக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.