பட்ஜெட்டை நம்பி மோசம் போன தங்கம்: ஒரே நாளில் விலை பவுனுக்கு ரூ.440 உயர்வு- தொடர்ந்து உயரும்!
சென்னை: நேற்று தாக்கலான மத்திய பட்ஜெட்டில் தங்கம் இறக்குமதி வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வரி குறைக்கப்படும் என கருதப்பட்ட நிலையில் வரியில் எந்த மாற்றமும் இல்லாததால் நேற்றே தங்கம் விலை ஒரு பவுனுக்கு ரூ.440 உயர்ந்தது.
இந்த விலை தொடர்ந்து உயரவும் வாய்ப்புள்ளது.
டாலர்கள் பற்றாக்குறை...
நமது அன்னிய செலாவணி கையிருப்பில் (டாலர்கள்) இருந்து தான் நாட்டுக்குத் தேவையான கச்சா எண்ணெய், அத்தியாவசியமான இறக்குமதிகளை செய்து வருகிறோம். ஆனால், இதில் தங்கம் இறக்குமதிக்கும் மிக அதிகமான டாலர்களை இறக்குமதியாளர்கள் செலவு செய்வதால், நாட்டில் டாலர்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.
இறக்குமதியைக் குறைக்க...
இதனால் டாலருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு டாலருக்கு இணையான ரூபாயின் மதிப்பு சரிகிறது. இதனால் நாட்டின் ஏற்றுமதி-இறக்குமதியுடன் தொடர்புடைய நடப்புக் கணக்கில் பெரும் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதைத் தடுக்க கடந்த ஆட்சியில் தங்கம் இறக்குமதியை குறைக்கும் வகையில் அதன் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டது. இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்தது.
சரிந்து உயர்ந்து சரிந்து உயர்ந்து...
தொடர் உயர்வுகள் தொடர்ந்த நிலையில், 9 மாதங்களுக்கு பின் கடந்த மே மாதம் 28ம் தேதி தங்கத்தின் விலை பவுன் ரூ.21,000க்கு கீழ் குறைந்தது. தொடர்ந்து தங்கத்தின் விலை தொடர்ந்து சில நாட்கள் இறங்கு முகமாகவே இருந்தது.
ஆனால் ஜூன் 20ம் தேதி தங்கத்தின் விலை மீண்டும் ஒரு பவுன் ரூ.21,000த்தைத் தாண்டியது. இதையடுத்து விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
பட்ஜெட்டையடுத்து சடாரென உயர்ந்த விலை...
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2,660க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.21,280க்கும் விற்கப்பட்டது. இந் நிலையில் பட்ஜெட்டில் இறக்குமதி வரி குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாததால், ஒரே நாளில் கிராமுக்கு ரூ.55ம், பவுனுக்கு ரூ.440ம் அதிகரித்து, ஒரு பவுன் தங்கம் ரூ.21,720 ஆக உயர்ந்தது.
தொடர்ந்து உயருமாம்...
இதே போல தங்கத்தின் தம்பியான வெள்ளியின் விலையும் அதிகரித்தது.
இந் நிலையில் வரிக் குறைப்பு இல்லாததால் வரும் நாட்களிலும் தங்கத்தின் விலை உயர வாய்ப்பு இருக்கிறது என்று வியாபாரிகள் தெரிக்கின்றனர்.