விவசாய கடன் தள்ளுபடி இல்லை.. மத்திய அரசின் பட்ஜெட் பெரும் ஏமாற்றம் - வேல்முருகன்
மத்திய அரசு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட் பொதுவாக அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏமாற்றம் தரக்கூடியதாகவே இருக்கிறது என வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை: அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பாஜக அரசின் இந்த பட்ஜெட் வார்த்தை ஜாலங்களால் நிரம்பியதுதானே தவிர பொதுவாக ஏமாற்றம் தரக்கூடியதாக இருக்கிறது என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தாக்கல் செய்த இன்றைய மத்திய பொது பட்ஜெட்டில் பாராட்டத்தகுந்த அம்சங்கள் எதுவுமே இல்லை. முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பின்பற்றிய அதே வரிவிதிப்பு முறைகளை பின்பற்றி வருகிறது பாஜக அரசு.
குறிப்பாக வருமானவரி செலுத்துவோரின் நீண்ட கால எதிர்பார்ப்பை இந்த பட்ஜெட் நிறைவு செய்யவில்லை. வருமான வரி விலக்கு உச்சவரம்பு இந்த ஆண்டும் உயர்த்தப்படாதது பெரும் ஏமாற்றத்தையே தந்துள்ளது. ஏழை எளிய மக்களுக்கான எந்த ஒரு திட்டமுமே இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய பாஜக அரசு அதன் சாதக அம்சங்களை, கருப்பு பணம் பதுக்கல் விவரங்களை இந்த பட்ஜெட்டில் தெரிவிக்கவில்லை.
தமிழகத்தில் இதுவரை 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனால் மத்திய பட்ஜெட்டில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி உள்ளிட்ட எந்த அம்சங்களுமே இடம்பெறவில்லை என்பது ஏமாற்றமளிக்கிறது. இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு அம்சங்கள் எதுவும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
ரயில்வே துறைக்கான தனி பட்ஜெட்டை ரத்து செய்து பொதுபட்ஜெட்டில் இணைத்தபோதும் அந்த துறைக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்பதை அருண்ஜேட்லியின் இந்த பட்ஜெட் வெளிப்படுத்துகிறது. 50 ஆண்டுகாலமாக பல்வேறு ரயில் திட்டங்களை எதிர்நோக்கியுள்ள தமிழகத்துக்கு இது பெரும் ஏமாற்றமே.
கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் நிலைமை குறித்து இந்த பட்ஜெட்டில் விளக்கப்படவில்லை. அதே நேரத்தில் அரசியல் கட்சிகள் ரூ2,000க்கு மேல் ரொக்கமான நன்கொடையாக வசூலிக்க கூடாது என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியதாகும். அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பாஜக அரசின் இந்த பட்ஜெட் வார்த்தை ஜாலங்களால் நிரம்பியதுதானே தவிர பொதுவாக ஏமாற்றம் தரக்கூடியதாக இருக்கிறது. இவ்வாறு வேல்முருகன் கூறியுள்ளார்.