பட்ஜெட்டில் புதிய வேலைவாய்ப்புகளுக்கான எந்த அறிவிப்பும் இல்லை: ஈஸ்வரன்
பட்ஜெட்டில் புதிய வேலைவாய்ப்புகளுக்கான எந்த அறிவிப்பும் இல்லை என்று ஈஸ்வரன் குறிப்பிட்டு உள்ளார்.
சென்னை : எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு இந்த பட்ஜெட்டில் புதிய வேலைவாய்ப்புகளுக்கான எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்து உள்ளார்.
2018-19ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்தார். இதுகுறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
எதிர்க்கட்சித்தலைவர்கள் பட்ஜெட்டை விமர்சித்துள்ள நிலையில், கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் பட்ஜெட் ஏமாற்றத்தையே அளித்துள்ளது என்று குறிப்பிட்டு உள்ளார்.
வேலைவாய்ப்புகள் இல்லை
விவசாயம், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட துறைகளுக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும் அதன்மூலம் அந்தந்த துறைகளில் வளர்ச்சியை கொண்டு வருவதற்கான செயல்திட்டங்கள் இல்லை. தேசத்தின் இன்றைய தேவை இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் தான். புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்குவதற்கான எந்த அறிகுறியும் நிதிநிலை அறிக்கையில் தென்படவில்லை.
ஏமாற்றத்தை கொடுத்த பட்ஜெட்
படித்த இளைஞர்கள் விவசாயத்திற்கு வந்தால் மட்டும்தான் விவசாயத்தை லாபகரமானதாக மாற்ற முடியும். ஆனால் படித்த இளைஞர்களை விவசாயத்திற்கு ஈர்ப்பதற்கான எந்த அறிவிப்புகளும் இல்லாத பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. கடனை அதிகமாக கொடுப்பதன் மூலம் லாபத்தை அதிகரிக்க முடியாது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, தனிநபர் வருமானத்தின் வரி விலக்கு அளவை உயர்த்தாதது மிகப்பெரிய ஏமாற்றம்.
நதிகள் இணைப்பு திட்டம்
தொழில் நிறுவனங்களுக்கான வருமானவரி குறைப்பு வரவேற்கத்தக்கது. ஆனால் தொழில் நிறுவனங்கள் லாபத்தை ஈட்டுவதற்கான ஊக்கம் கொடுக்கும் அறிவிப்புகள் பட்ஜெட்டில் இல்லை. 2014ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலிலேயே நதிகளை இணைப்போம் என்று வாக்குறுதி அளித்தவர்கள் கடைசி நிதிநிலை அறிக்கையிலும் திட்டங்களை தீட்டாதது ஏமாற்றமளிக்கிறது. நிச்சயம் இந்த அறிவிப்பு மீண்டும் அடுத்தத் தேர்தலில் அது எதிரொலிக்கும்.
திட்டங்கள் செயல்படுத்தப்படுமா ?
இந்திய தொழில்துறையின் முதுகெலும்பே சிறு, குறு தொழில்கள் தான். அந்த துறையை மேம்படுத்துவதற்கான தேவையான நிதியும் ஒதுக்கப்படவில்லை, திட்டங்களும் இல்லை. மொத்தத்தில் இந்த அரசாங்கம் அறிவிப்புகள் மக்களை ஈர்க்கும்படி செய்வதில் திறமையாக இருக்கிறது. ஆனால் எந்தவொரு திட்டமும் சிறப்பாக செயல்படுத்தாதது தொடர்கிறது என்று ஈஸ்வரன் வருத்தம் தெரிவித்து உள்ளார்.