சாமானியர்களுக்கு ஏமாற்றம்... வழக்கம் போல கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே லாபம் தரும் பட்ஜெட்!
பட்ஜெட் குறித்து பல்வேறு எதிர்பார்ப்புகளை இருந்த நிலையில் சாமானியர்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாகவே இது அமைந்துள்ளது.
Recommended Video
சென்னை : மத்திய பொது பட்ஜெட் தேர்தல் பட்ஜெட்டாக இல்லாமல் கிராமப்புற மக்களை குறி வைத்து அவர்களை ஈர்க்கும் பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது. சாமானியர்களுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாகவும் வழக்கம் போலவே கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபம் தரும் பட்ஜெட்டாகவே மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.
2018-19ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஒரு மணி நேரம் 51 நிமிடங்கள் வாசித்தார். இந்த பட்ஜெட்டில் சாமானியர்கள் மிகவும் எதிர்பார்த்த வருமான வரி விலக்கு உச்சவரம்பானது உயர்த்தப்படவில்லை இது மாத ஊதியம் பெருவோருக்கு மிகப்பெரிய ஏமாற்றம் தருவதாக இருக்கிறது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை வருவாய் அடிப்படையில் பிரித்து அறிவிப்பை வெளியிட்டுள்ள மத்திய அரசு. ரூ. 250 கோடி வரை வருவாயுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி 25 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு லாபம் இருக்கும் என்பதோடு நடுத்தர மற்றும் சிறு நிறுவனங்களுக்கு சாதகமானதாக இருக்கும் என்று கூறுகின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
சீனியர் சிட்டிசன்களுக்கு சலுகை
மருத்துவம் மற்றம் போக்குவரத்து செலவினங்களில் மூத்த குடிமக்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை வரிக்கழிவு அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று மாத ஊதியம் பெறுவோருக்கான நிரந்தர வரிக்கழிவு ரூ. 40 ஆயிரமான நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதை அவர்கள் சுகாதாரம் மற்றும் போக்குவரத்து செலவினங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏழைகளை குறி வைத்து மோடி கேர்
ஏழை மக்களை குறி வைத்து மத்திய அரசு செய்துள்ள ஒரு புத்திசாலித் தனமான அறிவிப்புகள் தான். 10 கோடி ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை மருத்துவ சிகிச்சையை அரசே ஏற்கும் என்றும், ஒரே நேரத்தில் 10 கோடி குடும்பங்களுக்கு சுகாதார காப்பீடு என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால் ஒபாமா கேர் போல இந்தியாவில் 'மோடி கேர்' திட்டத்தை அரசு முயற்சித்து பார்க்கிறது என்று சொல்லாம்.
சிறு, குறு தொழில் முனைவோருக்கு ஏமாற்றம்
ஆனால் பட்ஜெட்டில் சிறு, குறு தொழில்கள் எதிர்பார்த்த சலுகைகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. ஏனெனில் ஜிஎஸ்டிக்கு பிறகு நலிவடைந்திருக்கும் சிறு, குறுந்தொழில்களின் வளர்ச்சிக்கு சாதகமான அறிவிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முத்ரா திட்டத்தின் கீழ் ரூ.4.6 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு மற்றும் கடன் இலக்கு ரூ. 3 லட்சம் கோடி என்பதைத் தாண்டிய அறிவிப்புகள் இல்லாதது தொழில்முனைவோருக்கு ஏமாற்றமே தந்துள்ளது.
சாமானியர்களுக்கு நல்ல சேதி இல்லை
அரசு அறிவித்துள்ள காப்பீடு திட்டங்களும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே ஒதுக்கப்படும் என்பதால் இந்த பட்ஜெட் சாமானியர்களுக்கான பட்ஜெட்டாக இல்லாமல் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே பயன் தரும் பட்ஜெட்டாக இருக்கிறது என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். குடியானவர்களுக்கு அறிவிக்கப்படும் திட்டங்கள் நேரடியாக அவர்களைச் சென்றடைவதில்லை, இடையில் இருக்கும் கார்ப்பரேட் ஏஜென்டுகளே பலனில் பாதியை அனுபவிக்கின்றன என்பதும் மற்றொரு குற்றச்சாட்டு.