கட்டுமானப் பொருட்களின் விலை கிடுகிடு உயர்வைக் கண்டித்து சென்னை கட்டுமான சங்கம் போராட்டம்!
கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் முதல் வாரத்தில் போராட்டம் நடத்துவதாக சென்னை கட்டுமான சங்கத்தினர் அறிவித்துள்ளனர்
சென்னை: கட்டுமானம் பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஏப்ரல் முதல் வாரத்தில் போராட்டம் நடத்துவதாக சென்னை கட்டுமான சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது குறித்து சென்னை சேப்பாக்கத்திலுள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் சிதம்பரம் கூறியதாவது:
மணல் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் கட்டுமானத் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் 30க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.
கட்டுமான பொருட்களுக்கு வாரியம் அமைப்பது மட்டும் தான் இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைய முடியும். மேலும் விலை நிர்ணயக் குழுவை அமைக்க வேண்டும் என்று பல முறை தமிழக அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.
ஆனால் இது தொடர்பாக தமிழக அரசு மெத்தனமாக உள்ளது. எனவே அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஏப்ரல் முதல் வாரத்தில் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு சிதம்பரம் கூறினார்.