மெட்ரோ சுரங்க பணியின்போது கடையோடு வீடும், பூமிக்குள் புதைந்தது! சென்னையில் பரபரப்பு!!
சென்னை: மெட்ரோ ரயில் அமைக்கும் பணியின்போது, கட்டிடம் ஒன்று பூமிக்குள் புதைந்ததால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,.
சென்னையில், மெட்ரோ ரயில் பணிகளுக்காக, திருமங்கலம்-ஷெனாய் நகர் இடையே 5 கி.மீ தூரம் சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது. இதில் தண்டவாளம் அமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது. அவசரகால வழி அமைத்தல் மின்சார உபகரணங்கள் பொருத்துதல் போன்ற வேலைகள் நேற்று இரவு நடந்தது. ஏராளமான மெட்ரோ ரயில் ஊழியர்கள் இதில் ஈடுபட்டிருந்தனர்.
மண்ணுக்குள் இறங்கிய கட்டிடம்
இரவு 11.30 மணியளவில் ஷெனாய்நகர் பில்லா அவென்யூ சாலையும், 8வது குறுக்கு தெருவும் சந்திக்கும் இடத்தில் உள்ள ஒரு கட்டிடம் திடீர் என்று 2 அடி மண்ணுக்குள் இறங்கியது. இதனால் அருகில் உள்ள வீடுகளும் அதிர்ந்தன.
மக்களுக்கு நில நடுக்க பீதி
இந்த சம்பவத்தால், நில நடுக்கம் ஏற்பட்டதை போல அப்பகுதி மக்கள் உணர்ந்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வந்தனர். அப்போது ஒரு கட்டிடம் மட்டும் கீழே இறங்கி இருந்தது. அதன் சுவர் மற்றும் அடிப்பகுதி சேதம் அடைந்திருந்தது.
கடைகள் பூட்டு
கட்டிடத்தின் தரைப் பகுதி முழுவதும் பூமிக்குள் இறங்கி இருந்தது. இந்த தரை மட்டத்தில் 4 கடைகளும், மேல் தளத்தில் கட்டிட உரிமையாளரின் வீடும் உள்ளது. 2400 சதுர அடி உள்ள இந்த கட்டிடத்தின் பெரும் பகுதி சேதம் அடைந்துள்ளது. வீட்டின் மேல் பகுதியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. கடைகள் அமைக்கும் பகுதியில் சுற்றுச்சுவர் கூண்டோடு சரிந்து காணப்படுகிறது. இதனால் இன்று அந்த கடைகள் திறக்கப்படவில்லை.
தெருவுக்கு சீல்
மெட்ரோ ரயில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். கட்டிடம் புதைந்த இடம், சேதம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர். அந்த தெருவை சீல் வைத்து போக்குவரத்தையும் தடை செய்தனர். சேதம் அடைந்த கட்டிடத்தை சரி செய்யவும் உரிமையாளருக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உறுதி அளித்தனர்.
மக்களுக்கு அனுமதி மறுப்பு
சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வீட்டு உரிமையாளர் முருகன், மாடியில் உள்ள வீட்டில் தொடர்ந்து குடும்பத்துடன் இருக்கிறார். சம்பவம் குறித்து முருகன் கூறியதாவது: வீட்டின் கீழே 4 கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளேன். மாடியில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசிக்கிறேன். நேற்று இரவு வீட்டில் எனது மனைவி, மகள் மற்றும் மாமனார் தூங்கிக்கொண்டிருந்தனர். நான் மதுரைக்கு சென்று விட்டு 11.30 மணி அளவில் வீடு திரும்பினேன.
ஏற்கனவே இப்படித்தான்..
வீட்டுக்குள் நான் நுழையும் போது பயங்கர வெடி சத்தம் போன்று கேட்டது. திடீர் என்று கட்டிடம் பூமிக்குள் இறங்கியது. கட்டிட சுவர்களில் விரிசல் எற்பட்டது. தரை தளம் உடைந்து சுமார் 2 அடி பள்ளம் காணப்பட்டது. வீட்டில் இருந்தவர்களுக்கு என்ன ஆனதோ என்று பயந்து மாடிக்கு சென்றேன்.தூங்கிக்கொண்டிருந்தவர்களை எழுப்பி கீழே அழைத்து வந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
ஏற்கனவே இதே தெருவில் உள்ள மற்றொரு வீடும் இது போல் சேதம் அடைந்துள்ளது. அதை மெட்ரோ ரெயில் நிர்வாகம் சரி செய்துகொடுத்துள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் மெட்ரோ ரெயில் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.