சென்னை கட்டிட விபத்தில் ஒருவர் பலி.. உயிரிழந்தவர் பீகார் பப்லு என தகவல்!
கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
சென்னை: கந்தன்சாவடியில் உள்ள 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். இந்த கட்டிட விபத்து தொடர்பாக பொறியாளர்கள் 2 பேரிடம் போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தன் சாவடி பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றின் கட்டடப் பணி நடந்து வருகிறது. இதில் பெரும்பாலானோர் ஒரிசா உள்ளிட்ட வடமாநில மக்கள்தான் பணியாற்றி வருகின்றனர். நேற்று மாலையும் வழக்கம்போல் தொழிலாளர்கள் கட்டிடத்தின் கான்கிரீட் போடும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது பாரம் தாங்காமல் கட்டிடத்தின் இரும்பு சாரம் திடீரென சரிந்து விழ தொடங்கியது.
|
இரும்பு கம்பிகள் விழுந்தன
சிறிது நேரத்திற்கெல்லாம் கட்டிடம் மளமளவென இடிந்து விழுந்தது. கூடவே கான்கிரீட் போடும் இரும்புக்கம்பிகளும் விழுந்தன. இதில் ஏராளமான தொழிலாளர்கள் இந்த இடிபாட்டுக்குள் சிக்கி கொண்டனர். தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு விரைந்து வந்தனர். உடனடியாக மீட்பு பணிகளும் நடைபெற துவங்கியதில், 27 பேர் மீட்கப்பட்டனர்.
துரிதமாக மீட்டனர்
கட்டிட இடிபாட்டில் சிக்கியிருந்த மேலும் 18-க்கும் மேற்பட்டோர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் துரிதமாக ஈடுபட்டு பின்னர் அவர்களையும் மீட்டனர். மீட்கப்பட்டவர்கள் படுகாயம் அடைந்ததால், அவர்கள் பெருங்குடி தனியார் மருத்துவமனையிலும், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையிலும், இசிஆர் அவசர சிகிச்சை பிரிவிலும் மற்றும் ராயப்பேட்டை மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
பீகார் பப்லு மரணம்
இதில் படுகாயமடைந்தவர்களில் 5 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்லு என போலீசார் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து காயமடைந்தோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொறியாளர்களிடம் விசாரணை
விபத்து நடந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டார். விபத்து குறித்து அங்கிருந்தோரிடம் கேட்டறிந்தார். இதனிடையே, விபத்து நடந்த தனியார் மருத்துவமனை கட்டிடம் உரிய அனுமதி பெற்றுத்தான் கட்டப்பட்டு வருகிறதா? விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து கட்டிட பொறியாளர்கள் முருகேசன், சிலம்பரசன் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.