நாட்றம்பள்ளி அருகே எருதுவிடும் விழா கோலாகலம்-சீறிப்பாய்ந்த காளைகள் - 27 பேர் படுகாயம்
நாட்றம்பள்ளி அருகே எருது விடும் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
வேலுர்: நாட்றம்பள்ளியை அடுத்த காட்டூரில் எருது விடும் போட்டி நடைபெற்றது. காளைகளை பிடிக்க முயன்ற 27 பேர் காயமடைந்தனர்.
வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த காட்டூர் பகுதியில் நேற்று நடைபெற்ற எருதுவிடும் விழாவினை மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார், தாசில்தார் பிரபுகணேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்,
இதில், திருப்பத்தூர், வாணியம்பாடி, நாட்றம்பள்ளி, கிருஷ்ணகிரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 243 காளைகள் போட்டியில் பங்கேற்றன. போட்டியில் பங்கேற்ற காளைகள் அனைத்து காளைகளும் இரண்டு சுற்றுகள் ஓடவிடப்பட்டது.
இதில் குறிப்பிட்ட தொலைவை குறைந்த நேரத்தில் ஓடி கடந்த புதுப்பேட்டை பகுதியை சேர்ந்த காளைக்கு முதல் பரிசு 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. இதுதவிர 21 வகையான பரிசுகளும் வெற்றி பெற்ற காளைகளுக்கு வழங்கப்பட்டன.
இந்த எருதுவிடும் விழாவினை வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு ரசித்தார். மேலும் திரளான ரசிகர்கள் கலந்துகொண்டனர். மாடுகள் முட்டியதில் 27 பேர் காயம் அடைந்தனர். அவர்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அமைச்சர் வீரமணி இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.