மதுரை அருகே 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற ஜல்லிக்கட்டு- போலீஸ் தடியடியால் பரபரப்பு
மதுரை அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
மதுரை: மதுரை திருமங்கலம் அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் ஏராளமான மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக கலந்துகொண்டு காளைகளை அடக்கினர். இந்த போட்டியினை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் துவக்கி வைத்தார்.
திருமங்கலம், கரடிக்கல் கிராமத்தில் உள்ள சுந்தரராஜபெருமாள் கோவில் விழாவையொட்டி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் 500-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இந்தப் போட்டியை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தொடங்கி வைத்தார். சீறிப் பாய்ந்த காளைகளை, 800க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் உற்சாகமாக அடக்கினர்.
முன்னதாக, வாடிவாசல் வழியாக வராமல் தவறான பாதையில் மாடுகளை அழைத்து வந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
விழாக் குழுவினர்கள் சரியாக திட்டமிடாததால் போட்டி தொடங்கும்போது கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. அத்துமீறி களத்தில் நுழைந்தவர்களை கட்டுப்படுத்த, காவல்துறையினர் லேசான தடியடி நடத்தியதால் பரபரப்பு நிலவியது.