திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 2 பேர் உயிரிழப்பு-40 பேர் படுகாயம்
திருப்பத்தூர் அருகே நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 2 பேர் உயிரிழப்பு-40 பேர் படுகாயம்
திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே நடந்த மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 2 பேர் உயிரிழந்ததுடன், 38 பேர் படுகாயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே உள்ளது கண்டரமாணிக்கம் கிராமம். இங்குள்ள மிகவும் பிரச்சித்தி பெற்ற கோயிலான மாணிக்க நாச்சியம்மன் கோயிலுக்கு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமானோர் வந்து செல்வர்.
இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான விழாவில் நேற்று மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 260 காளைகள் பங்கேற்க வைக்கப்பட்டன. அதேபோல ஏராளமான இளைஞர்கள் இதில் கலந்துகொள்ள ஆர்வமுடன் இருந்தனர். விழா தொடங்கியதும், வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர்.
அப்போது சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 40 பேர் படுகாயமடைந்தனர். இவர்கள் அனைவரும் உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், எஸ்.வி.மங்கலத்தை சேர்ந்த சேவற்கொடியான், ஒடுவம்பட்டியை சேர்ந்த பெரியசாமி ஆகியோர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
மேலும் 4 பேர் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயமடைந்தவர்கள் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து திருக்கோஷ்டியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.