எலெக்ஷன் ஆபீசர் சார்.. ஆச்சு ஒரு வருஷம்... சிறுதாவூர் பங்களா பணம் பற்றிய அறிக்கை வரலையே?
ஜெயலலிதாவின் சிறுதாவூர் பங்களாவில்தான் கட்டுக்கட்டாகப் பணம் கண்டெய்னர் லாரிகளில் இருந்து இறக்கப்படுகிறது என கடந்த 2016 சட்டமன்ற தேர்தலின்போது வைகோ புகார் கூறியதுக்கு, விரைவில் மாவட்ட கலெக்டர் அறிக்கை
சென்னை: சிறுதாவூர் பங்களாவில் இருந்து கட்டுக்கடாகப் பணம் கொண்டு செல்லப்படுகிறது என்கிற வைகோவின் புகாருக்கு, விரைவில் மாவட்ட ஆட்சியர் அறிக்கை கொடுப்பார் என்று தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பதில் கூறினார். அவர் பதில் கூறி ஒரு வருடம் ஆகும் நிலையில், இதுவரை எந்த ஒரு அறிக்கையும் வரவில்லை.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவ்வப்போது தங்கி ஓய்வெடுக்கும் சிறுதாவூர் பங்களாவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2016 சட்டசபை தேர்தலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இந்த சிறுதாவூர் பங்களாவில், பல கண்டெய்னர்களில் இருந்து கட்டுக்கட்டாகப் பணம் இறக்கப்பட்டது என தொடர்ந்து புகார் கூறி வந்தார்.
அவருடைய புகாருக்கு அதிமுக தரப்பிலிருந்து எந்த பதிலும் கொடுக்கப்படவில்லை. ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தா.பாண்டியன், 'பணம் இறக்கப்படுவதாகக் கூறும் வைகோ, அதிலிருந்து ஒரு கட்டுப் பணத்தை எடுத்து எங்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கலாமே' என்று நையாண்டியாக கேள்வி எழுப்பினார்.
'சிறுதாவூர் பங்களாவில் இருந்து பணம் கண்டெய்னர் மூலம் வெளியே கொண்டு செல்லப்படுகிறதா?' என அப்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் 'மாவட்ட ஆட்சியரிடமும், காவல்துறையிடமும் இதுகுறித்து அறிக்கை அனுப்பச் சொல்லியிருக்கிறேன்' என கூறினார்.
அவர் சொல்லி, ஒரு வருடம் நெருங்கும் வேளையில் இதுகுறித்து ஒரு அறிக்கையும் கொடுக்கப்படவில்லை. அந்த கண்டெய்னர் விஷயத்தை தேர்தல் ஆணையமும் கண்டுகொள்ளவில்லை. இந்த சூழ்நிலையில்தான் அங்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.