தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை... சென்னை விமானநிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு
புத்தாண்டை ஒட்டி அனைத்து விமான நிலையங்களுக்கும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை: மத்திய உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து சென்னை உள்ளிட்ட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல், விமான போக்குவரத்து பாதுகாப்புத் துறையும் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு போட மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
மத்திய உளவுத்துறையின் தகவலின் படி, ஜெய்ஷ் ஈ முகமது, லஷ்கர் ஈ தொய்பா மற்றும் சில தீவிரவாத அமைப்புகளின் மிரட்டல் எதிரொலியாக உஷார் நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உலகம் முழுவதும் விமான நிலையங்களை குறிவைத்து நடந்த தனி மனித தாக்குதல்களை சுட்டிக்காட்டி உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரவும் பகலும் பிஸியாக இருக்கும் சென்னை விமான நிலையம் 7 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. நுழைவு வாயில்களில் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினரும், காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விமான நிலையத்திற்குள் வரும் வாகனங்கள் சோதனைக்குப்பிறகே அனுமதிக்கப்படுகிறது. சோதனைக்கு நேரம் எடுத்துக்கொள்ளலாம் என்பதால், பயணிகள் திட்டமிட்ட நேரத்தை விட முன்கூட்டியே விமான நிலையம் வந்தடையுமாறு விமான சேவைகள் துறைகேட்டுக்கொண்டுள்ளது.
மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் ரோந்து செல்லவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மாறுவேடத்தில் சென்னை மாநகர காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான பொருட்களைக்கண்டால், பயணிகள் உடனே அருகிலுள்ள காவலர், அல்லது விமான நிலைய பணியாளர்கள் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும், முன்பின் அறிமுகமில்லாத பயணிகளிடம் எந்த பொருட்களையும் வாங்கிச்செல்ல வேண்டாம் என்றும் விமான சேவைகள் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
விமான நிலையத்தின் வெளிப்புறம், உள்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள 150 ரகசிய கண்காணிப்பு கேமிராக்களை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்துவருகிறார்கள். சந்தேகத்திற்குறியவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவார்கள் என்றும் விமான ஆணையப்பணிக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மற்ற நாட்களைவிட, பண்டிகை அல்லது விசேட காலங்களில் தாக்குதல் நடத்தும்போது மக்கள் மத்தியில் கடும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்ற நோக்கில் தீவிரவாத அமைப்புகள் குறிவைத்து செயல்படுவதாக உளவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.