சென்னையில் ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூரு வங்கிக் கிளையில் கொள்ளை முயற்சி - போலீஸ் விசாரணை
சென்னையில் வங்கியின் சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னை ஒயிட்ஸ் சாலையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூரு வங்கிக்கிளையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. வங்கியின் சுவரில் துளையிட்டு கொள்ளையர்கள் கொள்ளை முயற்சி செய்துள்ளனர். வங்கி லாக்கரை உடைக்க முடியாமல் போனதால் பணத்தை எடுக்க முடியாமல் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏடிஎம் மூலம் தினமும் ரூ.2 ஆயிரம் மட்டுமே எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதுவும் ஒரு சில ஏடிஎம் இயந்திரங்களில் மட்டுமே நீண்ட வரிசையில் நின்று பணம் எடுக்க முடிகிறது.
வங்கியில் பழைய நோட்டுக்களுக்கு ரூ. 2000 மட்டுமே மாற்ற முடிகிறது. பணம் மாற்றுபவர்களின் கை விரல்களில் மை வைக்கப்படுகிறது. இந்த நிலையில் பணம் கொள்ளையடிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. வங்கிக்குச் சொந்தமாக 25 லட்சம் ரூபாய் வெள்ளிக்கிழமை கொள்ளையடிக்கப்பட்டது. அந்த பரபரபப்பு ஓய்வதற்குள் சென்னை அண்ணாசாலை அருகே ஒயிட்ஸ் சாலையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் வங்கிக் கிளையில் பணத்தை கொள்ளையடிக்க முயற்சி நடந்துள்ளது.
11 நாட்கள் தொடர் பணிக்குப் பின்னர் வங்கிகள் நேற்று விடுமுறை விடப்பட்டது. விடுமுறை இன்று காலை வங்கிக்கு திரும்பிய ஊழியர்கள் வங்கியின் சுவரில் ஓட்டை இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
வங்கியின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முடியாமல் போனதால் பணத்தை எடுக்க முடியாமல் போனதாக வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி
முன்னதாக நேற்று மாலையில் மயிலாப்பூர் லஸ் கார்னரில் உள்ள ஐசிஐசிஐ வங்கிக் கிளைக்கு சொந்தமான ஏடிஎம் மையத்தில் இருந்த 3 இயந்திரம் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. பணம் வராததால் ஏமாந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதுகுறித்து, மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர். முதல் கட்டமாக ஏடிஎம் மையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா மூலம் துப்பு துலக்கப்பட்டு வருகிறது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த 13 நாட்களாக மக்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.