இறந்துபோன 2 பன்றிகளை புதைத்த தொழிலாளிக்கு ரூ.1 லட்சம் அபராதம்! வால்பாறை அருகே வனத்துறை கெடுபிடி
கோவை: காட்டுப் பகுதியில் உள்ள எஸ்டேட் தோட்டத்தில் செத்து கிடந்த இரு பன்றிகளை புதைத்த தோட்ட தொழிலாளிக்கு தமிழக வனத்துறை அதிகாரி ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறையடுத்த சோலையாறு வனப்பகுதியிலுள்ள எஸ்டேட் தோட்டம் ஒன்றில் பன்றி புதைக்கப்பட்டுள்ளதாக, வானாம்பள்ளி வனச்சரகர் அறிவொளிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு இன்று சென்று, ஆய்வு நடத்தினர்.
அப்போது அந்த எஸ்டேட் பகுதியில் 2 பன்றிகள் புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. தோட்டத் தொழிலாளியான அந்தோணி என்பவர்தான் பன்றிகளை புதைத்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து அவரிடம் விசாரித்தபோது, தோட்டத்தில் 2 பன்றிகள் இறந்து கிடந்ததாகவும், எனவே துர்நாற்றத்தை தவிர்க்க புதைத்ததாகவும் தெரிவித்தார். இருப்பினும், வனத்துறைக்கு தகவல் கொடுக்காமல் காட்டில் பன்றியை புதைத்தது குற்றம் என்று கூறி, தோட்டத் தொழிலாளியான அந்தோணிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளார் அறிவொளி.
பன்றிகளை புதைத்ததற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் தோட்ட தொழிலாளிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அன்றாட கூலிகளான தோட்டத் தொழிலாளிகளால் இதுபோன்ற நெருக்கடியை எப்படி சமாளிக்க முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.