கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றி சித்ரவதை ... மகாராஷ்டிராவிலிருந்து மீண்டு வந்த மாரிமுத்து
மதுரை: வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு வந்து பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வரும் நிலையில், தென் தமிழகத்தில் இருந்து பல சிறுவர்கள் மகாராஷ்டிராவில் உள்ள ஸ்வீட் கடைகளுக்கு கொத்தடிமைகளாக செல்லும் அவல நிலை உள்ளது. உட்கார கூட முடியாமல் இரவு பகலாக ஓய்வின்றி உழைக்கும் தமிழக சிறுவர்களை கொதிக்கும் எண்ணையை ஊற்றி கொடுமைப்படுத்தும் சம்பவமும் அரங்கேறியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த மாரிமுத்து,15 என்ற சிறுவன் தன் அம்மாவின் கடனை தீர்க்க மகாராஷ்டிரா மாநிலத்தில் புந்தர்பூர் எனும் இடத்தில் ஸ்வீட் கடையில் வேலை பார்த்த போது அந்த கடை முதலாளியால் கொடுமைப்படுத்தப்பட்டு அங்கிருந்து தப்பி தமிழகம் திரும்பியுள்ளார்.
மாரிமுத்துவின் தாய் பட்ட ரூ.20,000 கடனை தீர்க்க ஓராண்டு ஒப்பந்த அடிப்படையில் தனது மகனை மகாராஷ்டிரா அனுப்பி வைத்துள்ளார். ரூ.40,000 கொடுப்பதாக ஒப்பந்தத்தில் பேசப்பட்டதையடுத்து பாதி பாதியாக பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
தினமும் சுமார் 15 மணிநேரம் வேலைப்பார்க்கும் மாரிமுத்துவுக்கு உட்கார கூட அனுமதி அளிக்கப்பதுவதில்லை. தலை வலி என சிறிது இடைவெளி கேட்ட மாரிமுத்துவை ஆபாச வார்த்தைகளால் வசைப்பாடி, கொதிக்கும் எண்ணெயை காலில் ஊற்றி அந்த கடை முதலாளி கொடுமை செய்துள்ளார்.
உடலில் பல இடங்களில் கொப்புளங்களுடன், கால்களில் காயங்களுடனும், தப்பி வந்த மாரிமுத்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு நேர்ந்த கொடுமைகளை கண்ணீர் மல்க செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார் மாரிமுத்து.
'காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை வேலைப்பார்ப்பேன். மிகவும் குறுகிய இடத்தில் நின்று இனிப்பு பலகாரங்கள் தயார் செய்வேன். சிறிது நேர உணவு இடைவெளிக்குப் பின் மீண்டும் பணியை தொடர்வேன்' என்று மாரிமுத்து தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் நடந்த அன்று, தலை வலி அதிகமாக இருந்ததால் சிறிது உட்கார அனுமதி கேட்டேன். அனுமதி தர மறுத்த முதலாளி ஆபாச வார்த்தைகளால் என்னை திட்டிவிட்டு கொதிக்க கொதிக்க இருந்த எண்ணெயை என் மீது ஊற்றிவிட்டார்.
என்னுடன் வேலைப்பார்க்கும் ஒருவரது உதவியால் நான் தங்கியிருக்கும் அறைக்கு சென்றேன். வலி தாங்க முடியாமல் அங்கிருந்த மாவை பூசி எரிச்சலை கட்டுப்படுத்தினேன் என்று மாரிமுத்து கூறியுள்ளார். அங்கிருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டுமென்று எண்ணி வெறும் ரூ.200யுடன், ரயிலில் பயணச்சீட்டு பெறாமல் தமிழகம் வந்து சேர்ந்தேன் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக மதுரை அரசு சாரா அமைப்பினரின் உதவியுடன் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.